ஆளுநர் மாளிகை நோக்கி திமுக திடீர் பேரணி... ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது
ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
Recommended Video
சென்னை: திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து கறுப்பு கொடியுடன் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிராக திமுகவினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில உரிமைகளைப் பறிக்கிறது என குற்றம்சாட்டி திமுகவினர் கறுப்புக் கொடி காட்டினர்.
அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கார் மீது கறுப்பு கொடிகளையும் திமுகவினர் வீசினர். இதையடுத்து 192 திமுகவினரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து கிண்டியிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி மு.க.ஸ்டாலின் தலைமையில் திடீர் பேரணி இன்று நடைபெற்றது. இதையடுத்து போலீஸார் ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்தனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில் மக்களை நேரடியாக ஆளுநர் சந்திக்கக் கூடாது.
ராஜாஜி,நேரு, இந்திரா, மோடிக்கு கறுப்பு கொடி காட்டிய கட்சி திமுக. பிரதமர் மோடி சாலையில் நடமாட முடியாமல் கறுப்பு கொடி காட்டினோம். மாநில உரிமைகளை பறிக்கும் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும்.
எங்களை கைது செய்து மாலையில் விடுதலை செய்யாமல் சிறையில் அடைக்க வேண்டும். மாநில உரிமைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்றார்.