கட்சியில் களையெடுப்பை தொடங்கும் ஸ்டாலின்... விரைவில் நிகழவுள்ள மாற்றங்கள்
சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முடிவுசெய்துள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போதே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.
அதன்படி முதற்கட்டமாக எந்த பிரச்சனையுமின்றி, சிறு சலசலப்பு கூட ஏற்படாத வண்ணம் டி.ஆர்.பாலுவிடம் இருந்த முதன்மை செயலாளர் பதவியை பறித்து கே.என்.நேருவுக்கு கொடுத்துள்ளார்.
இதேபோல் அடுத்தக்கட்டமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலரை மாற்றுவதற்கும் ஸ்டாலின் ஆயத்தமாகிவிட்டார்.
அல்லும் பகலும்
திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லும் பகலும் அயராது ஓடிக்கொண்டே இருக்கிறார். மக்களை அதிகமாக சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து வருகிறார். மக்கள் மத்தியில் திமுகவின் இமேஜை உயர்த்துவதற்கான பணிகளை அவர் செய்து வரும் நிலையில், ஒரு சில நிர்வாகிகளின் செயல்பாடுகளால் மொத்தக் கட்சியின் இமேஜும் சரிவதாக அவர் நினைக்கிறார். இதனால் இனியும் தாட்சனை பார்த்தால், அது சட்டமன்றத் தேர்தலுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் சில அதிரடிகளை கட்சியில் செய்யவுள்ளார்.
களையெடுப்பு
எந்தெந்த மாவட்டங்களில் கோஷ்டி அரசியல் செய்யப்படுகிறதோ அந்த மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக களையெடுக்கும் நடவடிக்கையை தொடங்கவுள்ளார் ஸ்டாலின். கோவை, சேலம், நாகை, போன்ற மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக கோஷ்டி பூசல் நிலவுகிறது. இந்த மாவட்டங்கள் உட்பட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவிய அரியலூர், கரூர், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிரடி மாற்றங்கள் இருக்குமாம். இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத அரியலூர் சிவசங்கரும் முதல்முறையாக ஸ்டாலினின் அதிருப்திக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செயலாளர்கள்
மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் மூலம் 7 மாவட்டச் செயலாளர்கள் வரை மாற்றப்படக்கூடுமாம். அவர்களுக்கு பதில் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ளவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் என்றும், சிலர் இளைஞரணியில் மாநில பொறுப்பிலோ, மாவட்ட பொறுப்பிலோ இருப்பவர்களாக கூட இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதோடு கட்டுபாட்டுடன் கட்சியை நடத்த முடியும் என்பது ஸ்டாலினின் எண்ணமாம்.
யோசனை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இந்த மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது, கட்சியில் மாற்றங்கள் நிகழப்போவது உண்மைதான், அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் அதை எப்போது தலைவர் செய்வார் என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை எனக் கூறினார்.