காஷ்மீரில் சிறையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை உடனே விடுதலை செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: ஜம்மு காஷ்மீர் சிறையில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறைகளிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர்.
கடந்த 6 மாதங்களாக எவ்வித விசாரணையுமின்றி இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் அடுத்தடுத்து மத்திய அரசு விடுதலை செய்து வருகிறது.
இருப்பினும் முன்னாள் முதல்வர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் வீட்டுக்காவலில் இருக்கும் படத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வெளியிட்டு, அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
Deeply troubled to see this picture of @OmarAbdullah
— M.K.Stalin (@mkstalin) January 27, 2020
Equally concerned about Farooq Abdullah, @MehboobaMufti & other Kashmiri leaders who are incarcerated without trial or due process.
Union Govt must immediately release all political prisoners and restore normalcy in Valley. pic.twitter.com/JaPBf2EFJJ
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் உமர் அப்துல்லா படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார். மேலும், 6 மாதங்களாக முன்னாள் முதல்வர்கள் காஷ்மீரில் வீட்டுக் காவலில் எந்தவித விசாரணையும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அனைவரையும் விடுதலை செய்து காஷ்மீரில் அமைதியை உருவாக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.