ஸ்டாலின் அசத்தல்.. திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல்!
Recommended Video
சென்னை: திமுக நிர்வாகியால் தாக்குதலுக்கு உள்ளான பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சேலம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி விற்பனை ஹோட்டலில், 28ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை, திமுக நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் உள்ளே நுழைந்து இலவச பிரியாணி கேட்டு சண்டை போட்டு அத்துடன் கேஷியர் முகத்தில் குத்துவிட்டனர். அவருடன் வந்த குண்டர்களும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ஓட்டல் ஊழியர்கள் பலரும் காயமடைந்தனர். இந்த கொலைவெறி தாக்குதல் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி அது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரில் சென்ற ஸ்டாலின்
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் யுவராஜ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் படுவதாக ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு மு.க. ஸ்டாலின் இன்று காலை ஏரியா கட்சி பிரமுகர்களுடன் சென்றிருந்தார். தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்களிடம் அவர் நலம் விசாரித்தார். முகத்தில் பிளாஸ்டர்களுடன் ஊழியர்கள் நடந்த சம்பவத்தை அவரிடம் விவரித்தனர். ஹோட்டல் உரிமையாளர் கூறுகையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போனில் என்னிடம் நடந்தது பற்றி கேட்டறிந்தார். பிறகு எனக்கு மனதே கேட்கவில்லை நானே நேரடியாக ஓட்டலுக்கே வருகிறேன் என்று தெரிவித்தார்.
விசாரித்ததே போதும்
நானோ திமுக தலைவர் கருணாநிதி தற்போது உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நீங்கள் ஹோட்டலுக்கெல்லாம் வந்து நேரம் செலவிட வேண்டியதில்லை. நீங்கள் இவ்வளவு பேசியதே பெரிய விஷயம் என்று தெரிவித்தேன்.
மனது கேட்கவில்லை
ஆனால் எனக்கு மனது கேட்கவில்லை நான் நேரடியாக வந்து பார்க்கிறேன் என்று தெரிவித்துவிட்டு வந்திருந்தார். அவர் வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. தாயுள்ளத்தோடு அவர் எங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்கத்தக்க நடவடிக்கை
கட்சி தொண்டர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களிலும், மீடியாவிலும், வெளியான நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய சம்பவத்தால் வணிக சமுதாயத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற குண்டர்கள் இனி தாக்குதல்களில் ஈடுபட முயல மாட்டார்கள். கட்சி தலைமையின் நடவடிக்கையால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அச்சம் ஏற்படும் என்று வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
|
ஸ்டாலின் எச்சரிக்கை
இதனிடையே ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தி.மு.கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்! இவ்வாறு கூறப்பட்டுள்ளது.