தூது அனுப்பிய அழகிரி.. பேசுவதற்கு மறுத்த ஸ்டாலின்.. கலக்கத்தில் உடன்பிறப்புகள்!
மு.க அழகிரி ஸ்டாலினிடம் பேசுவதற்கு தூது அனுப்பியதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Recommended Video
சென்னை: மு.க அழகிரி ஸ்டாலினிடம் பேசுவதற்கு தூது அனுப்பியதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் ஸ்டாலின் அழகிரியிடம் பேச முடியாது என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது திமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கட்சிக்குள் அறிவிக்கப்படாத பனிப்போர் நிலவி வருவதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு இன்று காலை மு.க அழகிரி சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துள்ளார்.
கோபத்தில் ஸ்டாலின்
அழகிரியின் இந்த பேச்சு ஸ்டாலினுக்கு கோபத்தை வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த அழகிரியிடம் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அங்கு மிகவும் இறுக்கமான சூழ்நிலை நிலவி உள்ளது.1 மணி நேரம் அங்கே இருந்த அழகிரி பின் தான் தங்கி இருந்த ரெசிடென்சி ஹோட்டலுக்கு கிளம்பி சென்றுள்ளார்.
ஸ்டாலினுக்கு தூது அனுப்பினார்
இந்த களேபரம் இத்தனை பெரிதாக மாறும் என்று அழகிரி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சில முக்கிய புள்ளிகள் தனக்கு சாதகமாக பேசாமல் போவார்கள் என்று அழகிரி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து ஸ்டாலினிடம் தூது பேச முடிவெடுத்து அழகிரி காய் நகர்த்தியதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் பேசவில்லை
இதற்காக இருவருக்கும் நெருக்கமாக இருக்கும் சில திமுக புள்ளிகளை அழகிரி தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஸ்டாலின் அழகிரி மீது கடும் கோபத்தில் இருப்பதாக அழகிரிக்கு பதில் வந்துள்ளது. அதன்பின் ஸ்டாலின் அழகிரியிடம் பேசுவதை விரும்பவில்லை என்று கூறியதாகவும் அறிவாலயம் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது. இது குறித்து நாளை செயற்குழுவில் ஸ்டாலின் பேச திட்டமிட்டு இருப்பதாகும் அழகிரிக்கு தகவல் பறந்துள்ளது.
கோபத்தை அடுத்து பேட்டி
இந்த பதிலை எதிர்பார்க்காத அழகிரி மீண்டும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளார். அதன்படி, திமுகவை நான் உடைக்கமாட்டேன். ஆனால் திமுக தானாக உடையும். திமுக தற்போது வலுவாக இல்லை. திமுக சரியாக செயல்பட்டிருந்தால் ஆர்கே நகரில் டெபாசிட் இழந்திருக்குமா என்று கேள்வி எழுப்பி ஸ்டாலினின் செயல்பாட்டை கண்டித்துள்ளார். திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்கும் வகையில் அவர் இப்படி பேசியதாக கூறப்படுகிறது.