அழகிரியை பாஜக இயக்குகிறதா?.. திமுகவின் குற்றச்சாட்டும்.. உண்மையான பின்னணியும்!
திமுகவிற்கு எதிராக, மு.க அழகிரியை பாஜக இயக்குகிறது என்று திமுக உறுப்பினர்கள் சிலர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.
சென்னை: திமுகவிற்கு எதிராக, மு.க அழகிரியை பாஜக இயக்குகிறது என்று திமுக உறுப்பினர்கள் சிலர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். திமுக உறுப்பினர்கள் இப்படி பேசுவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக ஸ்டாலினின் ஆதரவாளர்கள் பேசிக்கொள்கிறார்கக்ள்.
திமுகவில் தற்போது ஒரு தர்மயுத்தம் நடந்து கொண்டுள்ளது. இன்னும் முழுமையாக வீரியம் அடையாத இந்த போராட்டம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அழகிரி, திமுக நிர்வாகிகளின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்று கூறினார். 2-3 நாட்களில் முக்கிய அறிவிப்பு ஒன்றையும், தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவேன் என்றும் கூறினார். அதுதான் இப்போது பிரச்சனையை தூண்டியுள்ளது.
புகார் வைத்தனர்
அழகிரியின் இந்த பேட்டிக்கு பின் நேற்றுதான் திமுகவின் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் பேசிய சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் தொடங்கி சுப்புலட்சுமி ஜெதீசன் வரை எல்லோரும் அழகிரிக்கு எதிராக அவ்வப்போது பேசினார்கள். அதிலும் சிலர், அழகிரியை பின்னால் இருந்து டெல்லி இயக்குகிறது, அவருக்கு பின் பாஜக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறினார்கள்.
ஏன் இப்படி
அவர்களின் இந்த பேச்சுக்கு காரணம் இருக்கிறது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். கருணாநிதியின் இறுதி சடங்கின் போது, அங்கு வந்திருந்த தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் அழகிரியை சந்தித்து பேசி இருக்கிறார். அந்த மோசமான சூழ்நிலையில் கூட, அவர்களின் சந்திப்பு 25 நிமிஷம் நீடித்து இருக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள், ஏன் அந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து ஸ்டாலின் தரப்பு விசாரித்து வருகிறதாம்.
இன்னொரு காரணமும் இருக்கிறது
அதேபோல், அழகிரி கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தின் போது ராகுல் காந்தியை சந்திக்க மறுத்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த போது ராகுல் காந்தியை அழகிரி சந்திக்கவில்லையாம். பாஜகவின் தூண்டுதலின் பேரிலேயே அவர் இப்படி செய்தார், என்று திமுகவில் சில நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதுதான் காரணமாக அழகிரியின் உடல்நிலைதான் காரணமா என்று விவரம் வெளியாகவில்லை.
மோடி சந்திக்க விரும்பினார்
அதேபோல்தான் ஸ்டாலின் தரப்பிற்கு இன்னொரு கோபமும் இருக்கிறது. கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு வந்த பிரதமர் மோடி அழகிரியை சந்திக்க விரும்பியது கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் இருக்கும் நேரத்தில் ஏன் அழகிரியை சந்திக்க மோடி ஆசைப்பட்டார் என்று திமுகவினர் இடையே விவாதம் நடந்துள்ளது. இதெல்லாம்தான் அழகிரிக்கு பின் பாஜக உள்ளது என்று சொல்ல காரணம். மோடி வந்த போது அழகிரி ராஜாஜி அரங்கிற்குள் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் உறங்கிக் கொண்டு இருந்தார்.
அழகிரியின் தரப்பு கூறுவது என்ன
இதற்கு அழகிரி தரப்பு வேறு விளக்கமும் கொடுக்கிறது. அழகிரிக்கு நெருக்கமான சில நிர்வாகிகள், அண்ணனை பாஜக ஒன்றும் இயக்கவில்லை. அவர் சுயமாக யோசித்துதான் இதை பேசுகிறார். அவருக்கு நெருக்கமானவர்கள் கட்சியில் இல்லாததுதான் அவருக்கு வருத்தம். சீக்கிரமே அவர் சில நிர்வாகிகளை அழைத்து பேச இருக்கிறார். பெரிய புயல் உருவாகும் இனி என்று சொல்கிறார்கள். என்ன கலகம் உருவாகும் என்று கழகத்திற்கே தெரியும்.