ஏப் 5ல் கடையடைப்பு மட்டும் இல்லை.. ரயில், பேருந்துகளையும் மறிப்போம்.. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வரும் 5-ஆம்தேதி ரயில், பேருந்துகளை மறித்து போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 5-ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்துடன் ரயில், பேருந்துகளை மறித்தும் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்ற உடன் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு சென்றனர். அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது மத்திய அரசை ராஜினாமா செய்ய கோரும் பதாகைகள் ஏந்தி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் திருநாவுக்கரசர், ராமசாமி, திருமாவளவன், கி.வீரமணி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் வரும் தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளோம். அதுமட்டுமல்லாமல் ரயில், பேருந்துகளையும் மறித்து போராட்டம் நடத்தவுள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியம் நடைபெறும் வரை போராட்டம் தொடரும். கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தாலும் எங்கள் போராட்டத்தை நடத்துவோம். காவிரி உரிமை மீட்பு பயணத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
இந்த போராட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பச்சை துண்டு அணிந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மறியலிலும் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.