திருநங்கை சப் இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சேலத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி காவல்துறையின் துணை ஆய்வாளர் பதவி பெற்றதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினி, காவல்துறை துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினார்.
இதில் அவர் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வழங்கினார். இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார்.
இந்நிலையில் தருமபுரி உதவி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற திருநங்கை பிருத்திகாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடிந்து தர்மபுரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் சேலத்து திருநங்கை பிரித்திகா யாசினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களைப் பாதுகாக்க அந்தப் பணியில் அவர் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் பல படைக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான திட்டங்களை நிறைவேற்றி அரும்பாடுபட்ட திமுகவின் விருப்பம் ஆகும்.
15.4.2008 அன்று கருணாநிதி, இவர்களுக்கு திருநங்கைகள் என்று பெயர் சூட்டி, நல வாரியம் அமைத்து, அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை வழங்கி திருநங்கைகளுக்கு சம உரிமை, சம நீதி கிடைக்க பாடுபட்டார். பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கு ஏற்ற வாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு திருநங்கைகளுக்காக கழக ஆட்சியில் 150க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்க ஆணையிட்டு, அப்படி அமைக்கப்பட்ட குழுக்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நான் நிதியுதவி வழங்கியிருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சேலத்து திருநங்கை போல் திருநங்கைகள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் சந்தித்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் பிரித்திகா யாசினி சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் பல படைக்கவேண்டும் என்றும் அவர் போல் திருநங்கைகள் வெற்றி மேல் வெற்றி பெறவேண்டும் என்றும் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.