மாட்டிறைச்சிக்கு தடை.. கலெக்டர் அலுவலத்தில் திடீர் போராட்டம்.. 12 பேர் கைது
மாட்டிறைச்சி தடையை எதிர்த்து அனுமதியின்றி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நாகர்கோவில்: மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
மார்க்சிஸ்டு லெனினிஸ்டு விடுதலை கட்சி சார்பில் மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு விதித்துள்ள தடையை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதனால் வெகுண்ட அவர்கள் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ், மணவை கண்ணன் உள்பட நிர்வாகிகள் 12 பேர் கலெக்டர் அலுவலகம் முன் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடியந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.