என்ன சொல்லி எம்எல்ஏ அருண்குமார் கூவத்தூர் கூடாரத்தில் இருந்து வெளியேறினார் தெரியுமா?
கூவத்தூரில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ அருண்குமார் என்ன காரணம் சொல்லி அங்கிருந்து தப்பினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் நேற்றிரவு வெளியேறினார். அவர் என்ன காரணம் சொல்லி அங்கிருந்து வெளியேறினார் என்ற சுவாரசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக பிரிந்துள்ளது. முதல்வராக முயற்சித்த சசிகலா தனது ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்தார்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரது கனவில் குண்டை போட்டது. இதனால் தண்டனையை அனுபவிக்க அவர் பெங்களுரூ சிறைக்கு செல்லவே அதிமுக சட்டசபை குழு தலைவராக அவரது ஆதரவு அமைச்சாரன எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தார்.
சசி குடும்ப கட்டுப்பாட்டில் கட்சி
ஆனால் ஆட்சியும் கட்சியும் அவரது குடும்ப கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என திட்டமிட்ட குற்றவாளி சசிகலா. இதற்காக தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டு சென்றார்.
சசி தரப்பு ஆளும் ஆட்சி
இதைத்தொடர்ந்து கட்சி, ஆட்சி மற்றும் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் ரிசார்ட் டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.
மக்கள் கடும் எதிர்ப்பு
சசிகலா குடும்பத்தினர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொகுதி பக்கம் வரமுடியாது
சசிகலா குரூப்புக்கு ஆதரவு தெரிவித்தால் தொகுதிப் பக்கம் வரமுடியாது என்றும் மக்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் கருத்துக்கேட்ப சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர்.
நேற்று மாலை வெளியேறிய எம்எல்ஏ
நேற்று மாலை கூவத்தூர் கூடாரத்தில் இருந்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் வெளியேறினார். இன்று காலை சொந்த ஊரான பெரியம்பாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் எண்ணத்தை அறிந்த செயல்படுவேன் என்றார்.
தலைமை பிடிக்கவில்லை
சசிகலா குடும்பம் கட்சி மற்றும் ஆட்சிக்கு தலைமை ஏற்பது பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த 10 நாட்களாக மன இருக்கத்திலேயே இருந்ததாக அவர் கூறினார்.
அம்மாவுக்கு உடம்பு சரியில்லை
நேற்று மாலை ரிசார்ட்டில் இருந்து வெளியேறிய அவர் தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளார். இன்று காலை ஊர் வந்து சேர்ந்த எம்எல்ஏ அருண் குமார் கட்சியின் தலைமையை பிடிக்கவில்லை ஆகையால் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறேன் என்று கூறினார்.
சசிகலா தரப்பு அதிர்ச்சி
அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனக்கூறி ஊருக்கு போன எம்எல்ஏ அருண்குமார் கட்சி பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்திருப்பது சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது.