சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.. அவரை நீக்குங்கள்- கருணாஸ்
Recommended Video
சென்னை: சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். எனவே அவரை நீக்க வேண்டும் என பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு எம்எல்ஏ கருணாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வரை அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கருணாஸுன் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படி பேசிய கருணாஸ் இன்னும் எம்எல்ஏவாக நீடிக்க வேண்டுமா என பல்வேறு தரப்பினர் தன்னிடம் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் கருணாஸை டிடிவி ஆதரவு எம்எல்ஏவான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அரசு கொறடாவின் புகாரின் பேரில் தகுதி நீக்க சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சபாநாயகருக்கு கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி அவர் செயல்படவில்லை. சுதந்திரமாக முடிவு எடுக்காமல் உள்நோக்கத்துடன் முடிவு எடுக்கிறார். எனவே பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அவரை நீக்க வேண்டும் என கருணாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தான் கைது செய்யப்பட்டபோது சபாநாயகரிடம் அனுமதி பெற்றீரா என போலீஸாரிடம் கருணாஸ் கேட்டது குறிப்பிடத்தக்கது.