‘ஏலே நம்ம எம்.எல்.ஏ பாடுறாங்கலே...’ அதிமுகவினரை அசத்திய 'சங்கரன்கோவில்' முத்துச்செல்வி
சங்கரன்கோவில்: ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ சாதனை விளக்க கூட்டம் போட்டால், தொண்டர்களை கவர ஆடல் பாடல் நிகழ்ச்சி போட்டு அமரவைப்பார்கள். பிரியாணி கண்டிப்பா இருக்கு வாங்கிட்டு போங்க என்று அவ்வப்போது உற்சாகமாக பேசுவார்கள்.
நெல்லையில் இப்படித்தான் அ.தி.மு.க ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு சற்று தாமதம் ஆனதால், கட்சிக்காரர்கள் கலைய ஆரம்பித்தனர். ஆஹா இது சரிப்பட்டு வராதே போய் தூங்கிட்டாங்கன்னா என்ன செய்வது என்று யோசித்த சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ முத்துசெல்வி, திடீரென மேடையில் ஏறிய மைக்கை பிடித்தார்.
‘தொட்ட இடம் துலங்கவரும்.. தாய்க்குலமே வருக. கண் பட்ட இடம் பூ மலரும்.. பொன் மகளே வருக பொன் மகளே வருக... நீ வருக...!' என ‘முத்துச்சிப்பி' படத்தின் பாடலை பாடத் தொடங்கினார். குரலும் இனிமையாக கை கொடுக்கவே "ஏலே நம்ம எம்.எல்.ஏ பாடுறாங்கலே...'' என ஒட்டுமொத்த கூட்டமும் திரும்ப வந்து அமர்ந்து பாடலை ரசிக்கத் தொடங்கியது.
கட்சித்தொண்டர்கள் கொடுத்த உற்சாகத்தில் முழு பாடலையும் பாடி முடித்தார். கை தட்டல் ஆராவார விசில் அடித்த தொண்டர்கள், ‘இன்னொரு பாட்டு பாடுங்க...' என்று ஆர்ப்பரிக்க... போதும்பா என்று வெட்கத்துடன் கூறி கீழே இறங்கினாராம் முத்துசெல்வி.
எப்படியோ பாட்டு பாடி தொண்டர்களை கவர்ந்துவிட்டார் எம்.எல்.ஏ முத்துச்செல்வி என்று கட்சியினர் பேசிக் கொண்டனர். அப்போ அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டு பாடி ஓட்டு கேட்க ஒரு எம்.எல்.ஏ ரெடியாகிவிட்டார்.