எல்லாம் "நல்லபடியா" முடிந்ததும்.. ஓ.பி.எஸ் பக்கம் தாவிய மயிலை நடராஜ்!
நடுநிலை என்று இழுத்தடித்துக் கொண்டிருந்த மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் இன்று ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா தலைமையை ஏற்க மறுத்து பலர் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவித்த பிறகு ஓபிஎஸ்ஸு மேலும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
மொத்தம் 11 எம்எல்ஏக்கள்
சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன், செம்மலை, நட்ராஜ், உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
12 எம்பிக்கள்
தொடக்கத்தில் இருந்து எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்திருந்த நிலையில், தொடர்ந்து விழுப்புரம் ராஜ்யசபா எம்.பி லட்சுமணன், விழுப்புரம் லோக்சபா எம்.பி ராஜேந்திரன், வேலூர் எம்பி செங்குட்டுவன், தூத்துக்குடி எம்பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் எம்பி மருதுராஜா, நேற்று கடைசியாக சேர்ந்த மதுரை எம்பி கோபால கிருஷ்ணன் ஆகியோரை சேர்த்து 12 எம்பிகளின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்துள்ளது.
சசிகலா தலையெழுத்து
உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என்று அறிவித்துள்ள நிலையில், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓபிஎஸ் மீண்டும் நிரந்தர முதல்வராக மாறும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கூவத்தூர் எம்எல்ஏக்கள்
சொகுசு ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை காண ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூவத்தூர் சென்றுள்ளனர். ரிசார்ட்டில் உள்ள ஒரு சில எம்எல்ஏக்களைத் தவிர மற்றவர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று ஓபிஎஸ் ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.