ஜெ.,வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் - நட்ராஜ் எம்எல்ஏ
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: சட்டசபையில் இன்று மயிலாப்பூர் சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அவர் வாழ்ந்த போயஸ்தோட்ட வீடு யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா கட்டுப்பாட்டில் வேதா நிலையம் வந்தது. அவரும் சிறைக்கு போகவே, வேதா நிலையத்தை தீபாவும், தீபக்கும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவோம் என்று அறிவித்தார். இதற்கு தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பேசிய மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் வாழ்ந்த வீடு, அவர் உபயோகித்த நூல்கள், கார் ஆகியவைகளை பாதுகாப்பதன் மூலம் சென்னை வரும் அதிமுக தொண்டர்கள் என்றென்றைக்கும் பார்வையிட்டு செல்வார்கள் என்றார்.
மேலும் பேசிய நட்ராஜ், தமிழகத்தில் மதுபான பார்களை மூட வேண்டும் எனவும் நட்ராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் முதன் முறையாக ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்துள்ளார் எம்எல்ஏ நட்ராஜ்.