புதுக்கோட்டையில் திமுக போராட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
புதுக்கோட்டையில் திமுக போராட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை: புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த திமுகவினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.
புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளே நுழைய முற்பட்டதால் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகிய மூன்று எம்எல்ஏக்க கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்ததை கண்டித்து நாளை போராட்டம் நடத்த அனுமதி கோரி கே.கே.செல்லப்பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
புதுக்கோட்டையில் போராட்டம் நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இன்று பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த திமுகவினருக்கு அனுமதி வழங்கினார்.
புதுக்கோட்டையில் நாளை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.