பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. "சசிகலா"வாக மாறிய வெற்றிவேல்!
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்றும் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் எம்எல்ஏ வெற்றிவேல் கூறினார்.
சென்னை அடையாற்றில் உள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு எம்எல்ஏ வெற்றிவேல் சென்றார்.
அங்கு அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் நரசிம்ம ராவ் மாதிரி அமையாக ஏன் இருக்க வேண்டும்? கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சியே இருந்திருக்காது.
பொறுமைக்கும் எல்லை..
அதிமுகவின் இரு அணிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, முதல்வர் இனியும் மவுனம் காக்கக் கூடாது.
உத்தமர் போல..
கோ. அரி போன்று தவறு செய்பவர்களை எப்படி கிள்ளி எறிய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அவர் உத்தம சீலன் போல் பேசக் கூடாது. தான்தோன்றித்தனமாக பேசி வரும் அவரை தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து பேசாமல் எத்தனை நாட்களுக்கு முதல்வர் அமைதியாக இருப்பார்?
சசிகலாவிற்கு கட்டுப்பட்டது..
அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்குத்தான் இந்தக் கட்சியும் கட்டுப்பட்டது. ஏனென்றால் அவர்தான் பொதுச் செயலாளர்.
சசியிடம் ஆதரவு
பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று தம்பிதுரை சசிகலாவை சந்தித்தார். சந்திக்கும் போது எடப்பாடி பழனிச்சாமியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சசிகலாவிடம் பேசினார். இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் முதல்வரை? சசிகலாவை சந்திக்கும் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டுள்ளார் என்பதை தம்பிதுரை தெரிவித்தார்.
மடியில் கணம் இல்லை
இந்த சம்பவம் நடக்கும் போது யார் யார் உடன் இருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும். சில விஷயங்களை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருக்கிறேன். வெளியே சொல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன். ஏனென்றால் எனக்கு பயம் கிடையாது. காரணம் மடியில் கணம் கிடையாது என்று வெற்றி வேல் கூறினார்.