நாளை வருகிறது தகுதி நீக்க வழக்கு... 3-ஆவது நீதிபதி விமலா விசாரிப்பார் என தகவல்

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அதை 3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா விசாரிக்கக் கூடும் என தெரிகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இறுதி தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வும் அளித்தனர்.

தலையிட முடியாது
அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.

மாறுபட்ட தீர்ப்பு
அப்போது சுந்தர் கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

விமலா
3-ஆவது நீதிபதியை நியமிக்கும் பொறுப்பு மூத்த நீதிபதியான குலுவாடி ரமேஷுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த வழக்கை விமலா விசாரிப்பார் என தெரிகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!