தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் அரசியல் சட்டப்படி தகுதி நீக்கம்... சபாநாயகர் பதில் மனு
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் அரசியல் சட்டப்படியே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் அரசியல் சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் அந்த அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.
ஆனால் அரசு கொறடாவின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக ஆளுநரை சந்தித்ததாக 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
கடந்த 20-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து சபாநாயகர், முதல்வர், சட்டசபை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கை இன்றைக்கு ஒத்தி ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று அந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் சட்டப்படியே என்று சபாநாயகர் தரப்பில் 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை வழக்கறிஞர் அரிமாசுந்தரம் தாக்கல் செய்தார்.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவிச்சந்திரபாபு வழக்கு விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.