மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரைதான் வைக்கவேண்டும்.. வலியுறுத்தும் அந்த 3 பேர்!
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரையே சூட்ட வேண்டும் என்று ஒரே குரலில் கோரிக்கையை வலியுறுத்துவோம் என்று கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரையே சூட்ட வேண்டும் என்று ஒரே குரலில் கோரிக்கையை வலியுறுத்துவோம் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மூன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான காலம் கனிந்து வரும் நிலையில், அவரது பெயரை தாமதமின்றி சூட்ட மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும், அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
ஓயாது தொண்டாற்றியவர்
காந்தி, நேதாஜியோடு இணைந்து இந்திய விடுதலைக்காக அருந்தொண்டாற்றியவரும், மிக சிறந்த அரசியல் தலைவராகவும், சாதி சமய பேதமற்று, சமூக நீதிக்கு தன் இன்னுயிர் பிரியும் வரை ஓயாது தொண்டாற்றியவர்.
அவர் பெயரை சூட்ட வேண்டும்
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தனது செல்வங்களை வாரி வழங்கிய இத்திருமகனின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது பெயரையே மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஒரே குரலில் கோரிக்கை
இக்கோரிக்கையை திசை திருப்பும் வேலையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், மறைந்த ஒரு தலைவரின் பெருமையை நிலைநாட்ட தமிழர்கள் ஒரே குரலில் இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்றம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
பேருந்துநிலையம் பெயர் மாற்றம்
அண்மையில் மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இதற்கான பெயர் பலகை பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.