தேர்ந்தெடுத்து விட்டு தேமே என்று விழிக்கும் மக்கள்.. விமோச்சனம் எப்போது?
சென்னை: மக்கள் பிரதிநிதிகளை எதற்காக தேர்ந்தெடுக்கிறோம் என்றே தெரியவில்லை. தமிழகத்தில் தற்போது 20 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை.. மக்களுக்கான பணிகளில் பல்வேறு நிலைகளில் தேக்கம் என புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
கவுன்சிலரிடம் போய் முறையிடலாம் என்றால் அவர் இல்லை. அதிகாரிகளை நெருங்கவே முடியாத நிலை பல ஊர்களில். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் 90 சதவீதம் பேர் தொகுதிப் பக்கமே வருவதில்லை. அவர்கள் பிரச்சினையே வேறாக உள்ளது தற்போது.
ஆளுங்கட்சி பிரதிநிதிகள் ஆட்சியைக் காப்பாற்றுவதிலும், தங்களைக் காப்பாற்றுவதிலும்தான் முக்கியக் கவனமாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பெரிதாக எதுவும் இல்லாத அல்லது செய்ய முடியாத நிலை.
[20 தொகுதி இடைத் தேர்தல் நடந்தால்.. இந்த 3 கட்சிகளுக்கும் லாபம் கிடைக்குமாம்! #survey]
தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது
தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது என்பார்களே. இப்போது தமிழக மக்களின் நிலையும் அப்படித்தான். ஏகப்பட்ட பிரச்சினைகள். கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரச்சினை. நிம்மதியாக ஒரு நாளும் கழிவதில்லை.
மக்கள் கவலைகளைக் கேட்க ஆள் இல்லை
மக்கள் பிரச்சினைகளை கேட்க ஆள் இல்லை, தீர்த்து வைக்க யாரும் இல்லாத அவல நிலைதான். விவசாயிகள் தொடங்கி மாணவர் வரை அத்தனை பேருக்கும் பிரச்சினை. எங்கு பார்த்தாலும் போராட்டம், அடி உதை, வழக்குகள் என மாநிலமே நிம்மதியில்லாமல் தவிக்கிறது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை
தமிழகம் தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளது. வார்டு கவுன்சிலர் முதல் மேயர் வரை யாரும் கிடையாது. அதிகாரிகள் வசம்தான் உள்ளாட்சி அமைப்புகள். இதனால் மக்கள் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அடிப்படை வசதி தொடர்பான பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக புகார்கள் குவிகின்றன.
எம்எல்ஏக்கள், எம்பிக்களையும் காணோம்
மறுபக்கம் எம்.பிக்கள், எம்எல்ஏக்களைப் பார்த்தே பல காலமாகி விட்டது மக்களுக்கு. குறிப்பாக ஆளுங்கட்சி எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் எத்தனை பேர் தொகுதிப் பக்கம் வந்து போனார்கள் என்பதே தெரியவில்லை. போராடும் மக்களுடன் நின்று அவர்களுக்கு ஆறுதல் கூறுவோர், பிரச்சினைகளைத் தீர்க்க வருவோரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
ஜெயலலிதா இறந்தது முதலே ஆளுங்கட்சி பிரதிநிதிகள் தங்களது சொந்தப் பிரச்சினைகளில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று புகார் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதிக நேரம் போய் விட்டது. மறுபக்கம் தினகரன் குரூப் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர். அதற்கு முன்பும் கூட இவர்கள் மக்களைப் பார்த்ததாகவே தெரியவில்லை. இவர்களை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.
ஏன் இந்த அவலம்
இந்த அதிமுக ஆட்சியில் கூவத்தூர் முதல் குற்றாலம் வரையிலான கூத்துக்கள்தான் அதிகம் மேலோங்கி நிற்கின்றன. இதற்காகவே நாம் இவர்களைத் தேர்ந்தெடுத்தோம் என்று மக்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு மக்களுக்காக மக்களோடு மக்களாக தோள் கொடுக்க எப்போது இந்த மக்கள் பிரதிநிதிகள் வருவார்கள் என்றுதான் தெரியவில்லை.