உடைந்தது வைகோவின் 5 கட்சி கூட்டணி.. அ.தி.மு.க. கூட்டணிக்கு தாவுகிறது மனித நேய மக்கள் கட்சி!!
சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தலைமையிலான மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தில் இருந்து மனித நேய மக்கள் கட்சி விலகி அ.தி.மு.க.வை. நோக்கி நடையை கட்டத் தொடங்கிவிட்டது. சொந்த கட்சியினர் பிறகட்சிகளுக்கு தாவும் நிலையில் கூட்டணிக் கட்சியையும் வைகோவால் தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகளும் இணைந்திருந்தன.
இந்த கூட்டணியே அ.தி. மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அணியில் இருந்து தமிழருவி மணியன் எஸ்கேப் ஆனார்.
மமக விலகல் ஏன்?
அதன் பின்னர் 5 கட்சி கூட்டணியாக இது சுருங்கியது. தற்போது மனிதநேய மக்கள் கட்சியும் இக் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்குப் போராடத்தான் இந்த இயக்கத்தில் இணைந்தோமே தவிர இதையே ஒரு தேர்தல் அணியாக மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்கின்றனர் மனித நேய மக்கள் கட்சித் தலைவர்கள்.
திமுக கிடையாது
2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சிக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் மீண்டும் தி.மு.க. வுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று அந்த கட்சி முடிவு செய்தது.
ஜெ.வுக்கு புகழாரம்
இது தொடர்பாக அண்மையில் பேட்டியளித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, 2014 தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களுடன் கீழ்மட்ட தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து செயல்பட வில்லை. எனவே மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை பாராட்டியும் அவர் பேசத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்து இருப்பதற்காக அவர் ஜெயலலிதாவை மிகவும் புகழ்ந்து பேசினார்.
2016-ல் அ.தி.மு.க. அணியில்
இதன் மூலம் அ.தி.மு.க.வுடன் மீண்டும் மனித நேய மக்கள் கட்சி நெருக்கமாகிக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆகையால் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.