மாட்டிறைச்சி தடையை நீக்க.. ஓடும் ரயிலை மறித்து மமகவினர் போராட்டம்.. கோவையில் பதற்றம்
மாட்டிறைச்சி தடையை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை மாணவர்கள், சமூக இயக்கத்தினர், நடத்தி வருகின்றனர்.
ரயில் மறியல்
இந்நிலையில், இன்று கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று மாலை 100க்கும் மேற்பட்ட மமகவினர் கோவை ரயில் நிலையத்தை நோக்கி வந்தனர்.
தள்ளுமுள்ளு
அப்போது, அங்கிருந்த போலீசார் அவர்களை ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். போராட்டக்காரர்கள் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கைது
போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் ரயில் நிலையத்திற்குள் சென்று அப்போது அங்கு வந்த ஒரு பயணிகள் ரயிலை மறித்தனர். இதனைத் தொடர்ந்து மமகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
எதிர்ப்பு முழக்கம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினார்கள். தடையை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று மமகவினர் தெரிவித்தனர்.