விஜயகாந்த் தலைமையிலான குழுவில் இடம்பெறாதது ஏன்? மனித நேய மக்கள் கட்சி விளக்கம்
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் பிரதமரை அனைத்துக் கட்சிக் குழு சந்திப்பதற்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்பதால் அக்குழுவில் மனித நேய மக்கள் கட்சி இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
விஜயகாந்த் கோரிக்கை தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயம் என்பதினால் தே.மு.தி.க. ஏற்பாடு செய்யும் பயணக் குழுவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நானும், எம்.எச்.ஜவாஹிருல்லாவும் இடம் பெற்று டெல்லி செல்வது என்றும், பிரதமரை சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தங்களது முயற்சியின் அடிப்படையில்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகிறது என்று கூறிய கருத்து சர்ச்சையை உருவாக்கியது.
தே.மு.தி.க.வை பயன்படுத்தி பா.ஜ.க. முன் முயற்சியால் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று முடிவு செய்து டெல்லி பயணத்தை மனிதநேய மக்கள் கட்சி ரத்து செய்து விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.