ஆதார் தீர்ப்பு.. அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டி பார்க்க கூடாது.. கமல்ஹாசன் கருத்து
மக்களை அரசு நோட்டமிடக் கூடாது என்று கமல் கூறியுள்ளார்.
சென்னை: தனி மனித உரிமைகளை பாதிக்கும் வகையில் அரசு பொதுமக்களை நோட்டமிடுவதும், ஜன்னலை எட்டி பார்ப்பதும் சரியானது கிடையாது
சென்னை வந்துள்ள ஒடிசா முதல்வரை கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கமல் பேசினார். அப்போது பட்நாயக் சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து கேட்கப்பட்டது.
முன்னோடி திட்டங்கள்
அதற்கு பதில் அளித்த கமல், "அவருக்கு அரசியல் தெரியாது என்று விமர்சனங்கள் எழுந்தபோது, தனக்கு அது தெரியும் என்று செய்து காட்டியவர். தமிழகத்தை விட நல்ல திட்டங்களை தன் மாநிலத்தில் கொண்டு வந்துருக்கிறார்.
ரசிகனாக ரசித்தேன்
அவர் கொண்டு வந்த திட்டங்களில் பல இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்கள். மற்ற மாநில முதல்வர்கள் பொறாமைப்படும் அளவுக்கு மக்களுக்கு முக்கியமான விஷயங்களை செய்து வருகிறார். அனைத்து அதிகாரிகளின் ஆலோசனைப்படி பேரிடர் காலங்களை மக்கள் பாதிக்காத வண்ணம் சிறப்பாக கையாண்டார். அவற்றையெல்லாம் நான் ரசிகனாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவரிடம் சில ஆலோசனைகளையும் பெற்றேன்." என்று கூறினார்.
ஜன்னலை எட்டி பார்ப்பது
ஆதார் பற்றிய உச்சநீதின்ற தீர்ப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆதார் திட்டம் தனி மனித உரிமைகளை மீறியதாக இருக்கக்கூடாது. ஆதார் திட்டம் மக்களுக்கான திட்டமாக இருந்தாலும், அரசு பொதுமக்களை நோட்டமிடுவதும், ஜன்னலை எட்டி பார்ப்பதும் சரியானது கிடையாது. எப்பொழுதும் மக்களை கண்காணிக்கும் அரசாக இருக்கக்கூடாது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பற்றிய கேள்விக்கு, திறமைக்கு நாம் பதவி உயர்வு கொடுத்தே ஆக வேண்டும், சாதி அடிப்படையில் அதை மறுக்க முடியாது என்றார்.
உயிர்சேதம் இல்லா போராட்டம்
மக்கள் நீதி மய்யம் பிரச்சனைகளுக்காக போராடாமல், ட்விட்டரிலேயே போராடி வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல், போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். சுட்டுத்தள்ளும் வரை போராட வேண்டிய அவசியம் இல்லை. உயிர்ச்சேதம் இல்லாமலும் சில போராட்டங்களை வெல்லலாம். கிராம சபையின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்வது மக்கள் நீதி மய்யம் தான் என்றார். கடைசியாக பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இன்னும் உயர்வு வரப்போகுது, சாதாரண பொருட்களின் விலை எல்லாம் ஏறத்தான் போகிறது என்று பதிலளித்தார்.