கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது பொய் வழக்கு- ஜவாஹிருல்லா கண்டனம்.
சென்னை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது பொய் வழக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டசபை கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அறப்போராட்டம் நடைபெற்று வரும் இடிந்தகரை அருகே உள்ள சுனாமி காலனியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானதும் 3 வீடுகள் தரைமட்டமானதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு சிறிதும் தொடர்பு இல்லாத அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் தலைவர்களான சுப. உதயகுமார், புஸ்பராயன் உள்ளிட்ட நால்வர் மீது காவல்துறை பொய் வழக்கு தொடுத்திருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தாது மணல் கம்பெனிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு குழுக்கள் இயங்கி வருகின்றனர். அந்த ஊரைச் சார்ந்த மக்கள் பல கடலோர கிராமங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.
பலர் இடிந்தகரை கிராமத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுனாமி காலனியில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் வசித்து வந்த ஒரு வீட்டில் நேற்று (நவம்பர் 26, 2013) மாலை சுமார் 6:40 மணியளவில் பெரும் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கும் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்துக்கும் எந்த விதமானத் தொடர்பும் கிடையாது. இந்த நிகழ்வில் இடிந்தகரை மக்களுக்கும் எந்தவிதமானத் தொடர்பும் இல்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் அறவழிப் போராட்டமாகவேத் தொடர்கிறது ஏற்கெனவே கூத்தங்குழியில் தாது மணல் பிரச்சினையில் ஒரு குழு இன்னொரு குழுவைத் தாக்கி நடந்தத் தகராறில், புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உயர்நீதி மன்றம் புகாரை விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று (நவம்பர் 25, 2013) உத்தரவிட்டது. இந்த சூழலில உரிய விசாரணைகள் நடத்தாமல் அறவழிப் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டிருப்பது உண்மையான குற்றவாளிகளை தப்பவைக்கும் செயலாகும்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்திலின்படி தற்போது போடப்பட்டுள்ள வழக்கு உட்பட கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.