என் மொத்த சொத்தும் நீங்கதான்.. ஓய்வுக்கு நமக்கு நேரமில்லை.. செயல் மட்டுமே.. கமல்ஹாசன் அழைப்பு!
மக்கள் நீதி மய்யம் 3-ம் வருடத்தில் நுழைகிறது
Recommended Video
சென்னை: "என் மொத்த சொத்து எல்லாமே நீங்கதான்.. ஓய்விற்கு மட்டுமல்ல, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை... அடுத்து வரும் நாட்களெல்லாம் 'செயல்', 'செயல்' மட்டுமே" என்று மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோளும் அறைகூவலும் விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.. 2018 ஆம் ஆண்டு, பிப்.21ல் கமல்ஹாசன் கட்சியை தொடங்கினார்... அதற்குள் ஒரு தேர்தலையும் சந்தித்து, அதில், 3.72 சதவீதம் வாக்குகளையும் பெற்றார்.
கிராம சபையை முன்னெடுத்து வந்தாலும், கிராமப்புறத்தைவிட, நகர்ப்புற மக்களே இக்கட்சிக்கு பெரும் வாக்குகளை செலுத்தி இருந்தனர்... எனினும், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் மய்யம் போட்டியிடவில்லை.
சவால்கள்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் 3-வது ஆண்டிற்குள் நுழைகிறது. இதனை மய்ய உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக, அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்" என்று பதிவிட்டுள்ளார்.
3-ம் ஆண்டு
இதைதவிர, கமல் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "இன்று நாம் அனைவரும் மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் நிற்கின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்சி ஆரம்பித்த பொழுதில் இருந்த அதே எழுச்சியோடும் வேகத்தோடும் நாம் இன்றும் களம் காண்கிறோம். இதற்கு முதல் காரணம், நாம் களம் கண்ட முதல் தேர்தலில் பெருமளவில் வாக்குகள் அளித்து நம்மீது அவநம்பிக்கை கொண்டோரையும் ஆச்சரியத்தில் இமை உயர்த்த வைத்த நம் மக்களே.
தயக்கம்
நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது. அரசியலை வெகு தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, நான் கட்சி ஆரம்பித்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் என்னோடு கைகோர்த்து கட்சி வளர்க்கும் நம் நிர்வாகிகள் கள வீரர்கள் அனைவரும் கரம் குலுக்கி பாராட்டப்பட வேண்டியவர்களே. என் கனிவோடு, என் கண்டிப்பையும் பொறுத்திக்கொண்டு கடந்த 38 ஆண்டுகளாக என் நிழலிலும் எனக்கு நிழலாகவும் இருக்கும் என்றைக்கும் என் அடையாளமாக இருக்கப்போகும் நற்பணி இயக்கத்தை கட்டிக்காத்து வரும் என் தோழர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.
நாளை நமதே
இதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. அதற்கான பரிட்சை வெகு அருகில். 'ஓய்விற்கு மட்டுமல்ல, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை' அடுத்து வரும் நாட்களெல்லாம் 'செயல்', 'செயல்' மட்டுமே. 2021-ல் வென்று தொடங்குவோம் மக்கள் பணிகளை.... வாழ்த்துக்களோடும், நன்றிகளோடும், நம்பிக்கையோடும் நாளை நமதே!" என்று குறிப்பிட்டுள்ளார்.