நாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை
மக்களின் குறைத்தீர்க்க உடனுக்குடன் தீர்க்க இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை: பொதுமக்களின் குறைத்தீர்க்க உடனுக்குடன் தீர்ப்பதற்காக முதல் முறையாக இந்தியாவிலேயே எங்கும் இல்லாத நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் 108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது. அதை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்.
அந்த அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து மாஃபா பாண்டியராஜன் தெரிவித்ததாவது, 108 அம்சங்களில் 3 அம்சங்கள் பொதுவானதாகும். அவற்றில் ஒன்று ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இரண்டாவது, போயஸ் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும். மூன்றாவது, அதிமுகவையும், இரட்டை இலையையும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மீட்பது ஆகும்.
இதை தவிர்த்து மீதமுள்ள 105 அம்சங்கள் ஆர்.கே.நகருக்கானதாகும். அவற்றுள் மிக முக்கியமானது நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் ஆகும். கணினி பொருத்தப்பட்ட வேன்கள் தொகுதிகளில் வரும். அதில் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். பின்னர் அது புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு குறைகள் தீர்க்கப்படும். இந்த திட்டம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை.
- தரமான சாலை , குடிநீர் அமைக்கப்படும்.
- 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்
- எழில் நகரில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். இதில் தொழில்பூங்காக்கள், உணவு மையங்கள், நீருற்றுகள் உள்ளிட்ட ஏற்படுத்தப்படும். சென்னையிலேயே தொழில்பூங்கா இல்லாத தொகுதி ஆர்.கே.நகர் தொகுதிதான். அங்கு சேத்துபட்டில் ஜெயலலிதா தொடங்கியதை போன்ற தரமுள்ள பூங்கா அமைக்கப்படும்.
- மக்களுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும் வகையில் மொபைல் ஆப்கள் (செயலிகள்) அமைக்கப்படும்.
- ஆர்.கே.நகரில் இரு உயர்நிலைப்பள்ளிகளும், 1 மேல்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்படும்.
- தடையின்றி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
- இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அமைக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் பயிற்சி அளித்து வேலைவாயப்புகள் உருவாக்கித் தரப்படும்.
- சுகாதாரமான மருத்துவம், மருத்துவர்கள் இல்லாத பற்றாக்குறை களையப்படும்.
- சாக்கடைகள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
- ஆர்.கே.நகரில் உள்ள அரசுக் கல்லூரி உலக தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.
- கொடுங்கையூரில் குப்பை மேடு சீர்படுத்தப்படும்.
- பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும்.
- காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
- ஆர்.கே.நகரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி.
- பயோ பூங்காக்கள், தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
- பொதுத்துறை வங்கிகள், நூலகங்கள் அமைக்கப்படும்
- இந்த தேர்தல் அறிக்கைகள் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி முன்மாதிரி தொகுதியாக விளங்கும் என்றார் மாஃபா பாண்டியராஜன்.