ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனையில் செல்போன்களுக்கு தடை
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2வது மாடியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த ஃப்ளோர் முழுக்க நோயாளிகள் காலி செய்யப்பட்டு மருத்துவமனையின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர். மேல் மாடியில் என்ன நடக்கிறது என்பது பிற நோயாளிகளுக்கு தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விஷமிகள் உளவு பார்க்க வாய்ப்பிருப்பதால், அப்பல்லோவில் புதிதாக எந்த ஒரு நோயாளிக்கும் அட்மிஷன் போடப்படுவதில்லை என கூறப்படுகிறது. அதேநேரம், தினம் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டு என கூறி ஒரு போட்டோ சோஷியல் மீடியாக்களில் சுற்றி வந்தது. அதை அதிமுக தரப்பு மறுத்தது. இதேபோல வீடியோ வெளியானது. அதுவும் மறுக்கப்பட்டது.
ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை டாக்டர்கள், நர்சுகள் யாராவது அறியாமல் கூட போட்டோ எடுத்து அது லீக் ஆகிவிடக்கூடாது என்பதால் பணியாளர்கள் அனைவருமே செல்போனை ரிசப்ஷனில் வைத்துவிட்டுச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனையில் தங்களது நண்பர்களுக்கு நெருங்கிய டாக்டர் பணியாற்றுவதாகவும், அவர் ஜெயலலிதா உடல் நிலை பற்றி தங்களிடம் ஏதேதோ கூறினார் என்றும் கதைகளை அவிழ்த்துவிட்டு புழகாங்கிதம் அடைகிறார்கள் சிலர்.