மோடியின் அதிரடி அறிவிப்பால் இந்தியாவில் முடங்கிப்போன அமெரிக்கத் தேர்தல் பரபரப்பு!
ரூபாய் நோட்டுகள் தொடர்பான மோடியின் அதிரடி அறிவிப்பால் இந்தியாவில் அமெரிக்க தேர்தல் குறித்த பரபரப்பு அடங்கிப் போனது.
சென்னை: பிரதமர் மோடியின் அதிரடியான ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அப்படியே அடங்கிப் போனது.
ரூ 500 மற்றும் ரூ1000 நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை 100 ரூபாயாக மாற்ற முற்பட்டதால் ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் பங்குகள், மதுபான கடைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 50 நாட்கள் அவகாசம் கொடுத்தும் அதனை சரியாக புரிந்து கொள்ளாத பலர் இ கார்னர் மையங்களில் பணக்கட்டுடன் இன்றே டெபாசிட் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையால் நாடே அல்லோகளப்பட்டுவிட்டது. பிரதமர் மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் இந்தியாவில் அமெரிக்க தேர்தல் குறித்த செய்திகள் முடங்கிப்போனது.
பெரும்பாலான இந்திய டிவி சேனல்கள் அமெரிக்க தேர்தலை தொடர் நேரலை செய்யப்போவதாக அறிவித்திருந்தன. ஆனால் மோடியின் அறிவிப்பால் அனைத்து தொலைக்காட்சிகளும் அமெரிக்கத் தேர்தலை அப்படியே விட்டுவிட்டு ஏடிம் மையங்களில் இருந்தும் பெட்ரோல் பங்குகளில் இருந்தும் நேரலை கொடுக்க வேண்டியதாயிற்று.
அமெரிக்க தேர்தல் குறித்த விவாத நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டு ரூபாய் நோட்டு குறித்த மோடியின் அறிவிப்பு மற்றும் மக்களின் அவதி என நேரலை நிகழ்ச்சிகளை மாற்றின. மொத்தத்தில் மோடியின் அறிவிப்பால் இந்தியாவில் அமெரிக்க தேர்தல் குறித்த செய்திகள் முற்றிலும் முடங்கிப்போனது.