ஈஷா மைய விழாவிற்கு வரும் மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு… கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு
கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவனின் பிரமாண்ட சிலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதற்கு பிரமதர் மோடி வருவதால் 5 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.
கோவை: மகாசிவராத்திரியையொட்டி சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சியை ஈஷா மையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மாலை 5.30 மணியளவில் கோவைக்கு வரும் பிரதமர் மோடிக்கு சமூக இயக்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி ஈடுபட்டு வருகிறார்.
5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி கோவைக்கு வருகைக்கு சமூக இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் கோவையில 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் நடப்பதால் பாதுகாப்பு பல்வேறு வகைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குண்டு துளைக்காத கார்
கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு கார் மூலம் பிரதமர் மோடியை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விழா நடைபெறும் இடத்துக்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. பிரதமர் செல்வதற்காக குண்டு துளைக்காத 2 கார்கள் கோவையில் தயார் நிலையில் உள்ளன.
சிறப்பு பாதுகாப்புப் படை
பிரதமரின் பாதுகாப்பு பணியில் சிறப்பு பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிகளை சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி.பியூஸ் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஹெலிகாப்டர் ஒத்திகை
பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. பிரதமர் வருகையின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிரடிப்படை பாதுகாப்பு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி மேற்பார்வையில் நக்சல் தடுப்பு போலீசார் மற்றும் அதிரடிப் படையினரும் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர். மலை பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு சென்று சோதனை செய்து அவர்களுக்கு தொந்தரவும் அளிக்கப்பட்டு வருகிறது.