களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்: மே 6ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை
சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக பா.ஜ.க மாநில பொது செயலாளர் மோகன்ராஜூலு கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக மே 6ம் தேதி அவர் தமிழகம் வருகை தர இருப்பதாகவும் மோகன்ராஜூலு கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் மே 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக, தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி, பாமக, பாஜக என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தவிர நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஜான் பாண்டியன், சிங்க கூட்டணி என பல கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன.
பாஜக அணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு 73 தொகுதிகளை ஒதுக்கியுள்ள பாஜக பிற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, பாஜக மேலிட பொருப்பாளர் முரளிதர்ராவ் உள்ளிட்டோர் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி வருகை
தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் கொள்ளப்போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அகில இந்திய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் பங்கேற்பார்கள் என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
மே 6ம் தேதி மோடி பிரச்சாரம்
இதனிடையே தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மே 6ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு கூறியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை. ஆளுங்கட்சிக்கு ஒருவிதமாகவும், எதிர்க்கட்சிகளுக்கு வேறுவிதமாகவும் செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் காட்சிப்பொருளாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் படத்தை மறைக்க உத்தரவு
தேர்தல் கமிஷன் சார்பு செயலர் ராஜன் ஜெயின், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானிக்கு, எழுதியுள்ள கடிதத்தில் அரசு திட்டங்களில், பிரதமரின் புகைப்படம் இருப்பதும் தேர்தல் நடத்தை விதிமீறல் தான். எனவே, பிரதமரின் படங்களை அகற்றுவது அல்லது மறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜேஷ் லக்கானி உத்தரவு
இது குறித்து, தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் அனைத்து துறை செயலர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ஆணைய விளக்கத்தின் அடிப்படையில், பிரதமரின் படத்தை அகற்ற அல்லது மறைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளார்.