சினிமா நடிகர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்து நடிக்கவேண்டும்: மோடி வலியுறுத்தல்
சென்னை: கைத்தறியை உலக அளவில் பிரபலப்படுத்த திரைப்பட நடிகர்கள் ஒரு படத்திலாவது முழுவதும் கைத்தறி, காதி துணிகளை அணிந்து நடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கதர் போன்ற பொருட்களை நாட்டு மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது. இந்த பிரகடனம் 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
நாட்டு மக்களிடம் தேசியப் பற்றை ஏற்படுத்த வழிவகுத்த இந்த பிரகடன தினத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 7ம்தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டு பிரதமர் பொறுப்பை ஏற்றதும், இதற்கான அறிவிப்பை மோடி வெளியிட்டார்.
சென்னையில் ஆகஸ்ட் 7ம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய கைத்தறி தின தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகை தந்தார். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்த மோடி, அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நெசவாளர்களின் படைப்புக்களை பார்வையிட்டார்.
ஒவ்வொரு படைப்பையும் மிக நிதானமாக பார்வையிட்ட மோடி,சில நெசவாளர்களை பாராட்டினார்.குறிப்பாக காந்தியையும், பாரத கொடியையும் சேர்த்து நெசவு செய்யப்பட்டிருந்த தமிழக நெசவாளரின் கைகளை பற்றிய மோடி,இவ்வாறானதொரு படைப்பை எவ்வாறு நெசவு செய்தீர்கள் என கேட்டறிந்துகொண்டார்.
கைத்தறி தின விழா
சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் பகல் 11 மணிக்கு கைத்தறி தின விழா தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ரோசய்யா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கோகுலஇந்திரா பங்கேற்றனர்.
தேசிய கைத்தறி தினம்
ஆகஸ்டு 7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7ம்தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும்.
தேசிய கைத்தறி முத்திரை
கைத்தறியின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ‘‘தேசிய கைத்தறி முத்திரை'' உருவாக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி இன்று விழா மேடையில் அறிமுகம் செய்தார். இதையடுத்து கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நெசவாளர்களுக்கு விருது
2012ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சிறந்த ரகங்களை அறிமுகப்படுத்தி தனி முத்திரைப் பதித்த 72 நெசவாளர்கள் ‘‘சந்த் கபீர்'' மற்றும் தேசிய விருதுகள் பெற தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தம் கைப்பட விருதுகளை வழங்கியதோடு அவர்களைப் பாராட்டினார்.
காஞ்சிபுரம் நெசவாளர்கள்
விருது பெற்ற 72 நெசவாளர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். பட்டுப்புடவையில் சிறந்த ரகத்தை அறிமுகம் செய்த சுந்தர்ராஜனுக்கு ‘‘சந்த் கபீர்'' விருது வழங்கப்பட்டது. பழனிவேல் மற்றும் ஜெயந்தி இருவரும் தேசிய விருது பெற்றனர்.
சேலம் வெண்பட்டுக்கு விருது
தமிழக அரசின் கோஆப் டெக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சேலம் வெண்பட்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மென்மையாகவும், பளீரென மின்னும் சேலம் வெண்பட்டை தயாரித்து வழங்குவதற்காக கோஆப் டெக்சுக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். மேலும் மேற்கு வங்கத்தின் டங்கைல் சேலை, பனாரசின் தன்சோய் சேலையும் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கும் பிரதமர் மோடி வழங்கினார்.
இந்திய கைத்தறி
விழாவில் ‘‘இந்திய கைத்தறி'' என்ற புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர இந்தியாவில் உள்ள மூன்று சிறந்த கைத்தறி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கும் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. நெசவாளர்களை பாராட்டி அவர் சிறப்புரையாற்றினார்.
உலகறியச் செய்யுங்கள்
இந்திய கைத்தறி பொருட்களுக்கு பிராண்டிங் இல்லாதது மிகப்பெரிய குறை. சர்வதேச சந்தையில் நமக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றார்.
சினிமா நடிகர்கள்
கைத்தறி ஆடைகளை திரைப்படங்கள் பிரபலப்படுத்த சினிமா துறை முன்வர வேண்டும். திரைப்பட நடிகர்கள் கைத்தறி ஆடையை அணிந்து நடிப்பார்களா? என்று கேட்டார். பத்தில் ஒரு படத்திலாவது முழுவதும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
கல்வியில் மாற்றம்
நம்முடைய ஃபேஷன் டெக்னாலஜியில் மாற்றம் கொண்டுவரவேண்டும். காலத்திற்கு ஏற்ப கைத்தறியில் புதுப்புது யுக்தியை பயன்படுத்த வேண்டும். இந்த மாற்றத்தை கல்வியினால் மட்டுமே கொண்டு வரமுடியும்.
நவீனபடுத்துங்கள்
நவீன காலத்திற்கு ஏற்றாற்போல கைத்தறி ஆடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங்கில் கைத்தறி ஆடைகளை விற்றால் இளைஞர்களை கவர முடியும். இளைய தலைமுறையினர் கைத்தறி ஆடைகளை அணிய முன்வரவேண்டும்.
தொடர் இயக்கம்
கைத்தறி ஆடைகளின் தரத்தை உறுதிப்படுத்த கைத்தறி முத்திரை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 ஆகஸ்ட் 7ல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இனிமேல் ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும். தேசிய கைத்தறி தின இயக்கம் தொடர் இயக்கமாக இருக்க வேண்டும்.
வங்கிக்கணக்கில் நிதி
நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி இனிமேல் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நெசவாளர்களுக்கு நியாயமான கூலி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.