மோடியின் மூன்றாண்டு கால ஆட்சி வேதனையானது - விஷன் இந்தியா கட்சி பொன்ராஜ் 'எக்ஸ்ளூசிவ்'
மோடி தன் மூன்றாண்டு கால அரசின் வேதனைகளையும் சோதனைகளையும் மறைக்கத்தான் மாட்டிறைச்சி தடை சட்டம் கொண்டு வந்துள்ளார் என விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் வேதனைகளையும் சோதனைகளையும் மறைக்கத்தான் மாட்டுக்கறிக்கு தடை விதித்து பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது மோடி அரசு என விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: மோடியின் மூன்றாண்டுகால வேதனைகளை மறைக்கும் எண்ணத்துடன் பொருத்தமே இல்லாதவகையில் மாட்டிறைச்சி தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்ர்தால், நிற்காத ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நாடு முழுவதும் தேவையில்லாத ஒரு விவாதத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மோடியின் மூன்றாண்டு கலா ஆட்சியில் பல்வேறு தோல்விகள், வேதனைகள் நடந்துள்ளது. இதை மக்கள் மறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாட்டிறைச்சி விறபனைக்கான தடை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடுகளை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு என்ன வழி என்பதை மத்திய அரசு கூறவில்லை.
மாட்டிறைச்சி ஏற்றுமதி
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதல் இடம் பிடித்திருக்கிறது. பிரேசில் கூட இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. குளிர்பிரதேச நாடுகள் அதிக அளவில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்கின்றன. அதற்கு நல்ல சந்தை உள்ளது என்பதை புரிந்துகொண்டு மாட்டிறைச்சியை ஏற்றுமது செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை. மாட்டை பிழைப்புக்காக சார்ந்திருக்கும் விவசாயி மாடு விற்பனை செய்யத் தடை என்பது முரண்பாடான உத்தரவு.
மாட்டு இனங்களை அழிக்கும் முயற்சி
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து மாட்டு இனங்களை அழிக்க முயற்சி செய்த மோடி அரசு, கொல்லைப்புற வழியாக மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் மாடு இனங்களை அழிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் இது ஒரு செல்லுபடியாகாத சட்டம்.
இந்தியாவை யார் ஆள்கிறார்கள்?
மோடி நேரடியாக ஆட்சி செய்கிறாரா அல்லது வேறு யாரேனும் மறைமுகமாக ஆட்சி செய்கிறார்களா என தெரியவில்லை. மோடி நாட்டில் வளர்ச்சியைக் கொண்டு வருவேன் என்று கூறித்தான் வெற்றி பெற்றார். ஆனால் நாட்டை முன்னேற்றுவதில் கவனம் கொள்ளாமல் மாட்டை பிடித்துக்கொண்டு உள்ளார். மோடியின் பாதை தவறான பாதை. அவர் அதை சரி செய்துகொள்ள வேண்டும்.
விவசாயத்துக்கு என்ன செய்தது மோடி அரசு?
நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவீர்கள், நதிகளை இணைப்பீர்கள் என்றெல்லாம் நம்பித்தான் மக்கள் மோடிக்கு ஓட்டுப் போட்டார்கள். ஆனால் விவசாயத்துக்கு என்று ஒன்றும் செய்வில்லை. அதை மறைக்க மோடி அரசு மதம், மொழி துவேஷங்களை கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறது. பிரிவினைவாதத்தை இந்தியாவில் விதைத்துக்கொண்டிருப்பது சரியான போக்கு அல்ல.
வரலாறு மன்னிக்காது
இளைஞர்களும் பொதுமக்களும் மோடி, இந்தியாவின் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து நிலையான வளர்ச்சியைத் தருவார் என்ற எண்ணத்தில்தான் அவரை பிரதமர் ஆக்கினார்கள். ஆனால், அவர் அதற்கு நேர்மாறாக உள்ளார். இதே போக்கில் அவர் சென்றால் அடுத்த முறை அவர் பிரதமராக வெற்றி பெற மாட்டார். மோடியின் இந்த போக்கை வரலாறு மன்னிக்காது.