ஊழல் குற்றச்சாட்டுகள்.. எங்கள் ஆட்சிக்கு ஏற்பட்ட கதிதான் மோடி அரசுக்கு ஏற்பட போகிறது: ப.சிதம்பரம்
Recommended Video
சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியரசின் 2வது ஆட்சி காலத்தை போல மோடி அரசும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் விடைபெறப்போகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் கூறுகையில், நடக்க கூடாது என்று நான் நினைத்தாலும் கூட, 2019ல் மோடி அரசு பதவிக் காலம் நிறைவடையும் போது ஏகப்பட்ட ஊழல் புகார்களுடன்தான் அது விடைபெறும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது பதவிக்காலத்தின் முடிவில் எப்படி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோ அதே நிலைதான் இப்போது பாஜக அரசுக்கும் ஏற்படப்போகிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள்
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சிதம்பரம், மேலும் கூறியதாவது: இதற்கு முன்பு 5 ஆண்டுகால ஆட்சியை பூர்த்தி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இதன்பிறகு இப்போது மோடி அரசுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே 5 ஆண்டுகள் நிறைவடையும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட அதே ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திக்க வேண்டிவரும்.
விருப்பம் இல்லை
இப்படி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமக்க வேண்டும் என்பது எனது விருப்பம் இல்லை. ஆனாலும் அது நடந்தே தீரும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 2வது காலகட்டத்தில் அதிகபட்ச ஊழல் புகார்கள் எழுந்தன. ஆனால் புகார்களால் மட்டுமே யாரும் குற்றவாளிகளாக முடியாது. அதை நிரூபிக்கும்வரை யாரையும் குற்றவாளி என கூற முடியாது.
நிரபராதி என நிரூபிக்க வேண்டும்
இப்போதுள்ள காலகட்டத்தில் எல்லோருமே தங்களை நிரபராதி என நிரூபிக்காதவரை குற்றவாளிகள்தான் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தவறானது. சட்டத்தின் ஆட்சியை இதுபோன்ற மோசமான போக்கு சிதைத்துவிடும்.
ஊழலை ஒழிக்க முடியாது
தேர்தல் காலத்தில் செலவு செய்யவே ஊழல்கள் உருவாகின்றன. தேர்தல் செலவீனங்களுக்கான நிதி ஆதாரம் குறித்த வழிமுறைகளை கண்டறியும்வரை நமது நாட்டில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. மோடி அரசு ரூ.41 கோடி மதிப்புக்குள்ள கள்ள நோட்டுக்களைத்தான் பண மதிப்பிழப்புக்கு பிறகு கண்டறிய முடிந்துள்ளது. இது வெறும் 0.0027% மட்டுமே. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.