காஷ்மீர் சுயாட்சி விவகாரம்- பேயை கற்பனை செய்து கொண்டு தாக்கும் பிரதமர் மோடி: ப.சிதம்பரம் பாய்ச்சல்
காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என சாடியுள்ளார் ப.சிதம்பரம்.
சென்னை: ஜம்மு காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் எனில் கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு எந்த எந்த வகைகளில் முழுமையான தன்னாட்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும் என கூறியிருந்தார்.
காங்கிரஸ் ஒதுங்கியது
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் இது ப.சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக் கொண்டது.
ஜேட்லி, ஸ்மிருதி இரானி எதிர்ப்பு
மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடியும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மோடிக்கு சிதம்பரம் பதில்
பிரதமர் மோடியின் கண்டனத்துக்கு ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது: ராஜ்கோட்டில் சனிக்கிழமையன்று நான் பேசியதை முழுமையாக படிக்காமல் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். என்னுடைய கருத்துகளை விமர்சிப்பவர்கள் முதலில் நான் கூறியதை படிக்க வேண்டும்.
மோடிக்கு சிதம்பரம் கண்டனம்
அந்த கருத்தில் எது தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். பிரதமர் மோடி ஒரு பேயை கற்பனையாக சித்தரித்துக் கொண்டு தாக்குகிறார். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.