எங்கள் கைதுக்கு பின் யாரோ இருக்கிறார்கள்.. இது ஒரு சூழ்ச்சி.. பாரதிராஜா கடுமையான தாக்கு!
எங்கள் கைதுக்கு பின் சூழ்ச்சி இருக்கிறது, யாருடைய கட்டளையின் பேரிலோ இப்படி செய்கிறார்கள், யார் அவர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா போராட்டகாரர்கள் கைது குறித்து குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை: எங்கள் கைதுக்கு பின் சூழ்ச்சி இருக்கிறது, யாருடைய கட்டளையின் பேரிலோ இப்படி செய்கிறார்கள், யார் அவர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா போராட்டகாரர்கள் கைது குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சென்னையில் நடந்த ராணுவ கருத்தரங்கில் கலந்து கொள்ள இன்று மோடி தமிழகம் வந்தார். காவிரி போராட்டம் காரணமாக மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் அமீர், ராம், பாரதிராஜா, சீமான், வேல்முருகன் ஆகியோர் போராட்டம் செய்தனர். இதனால் இவர்கள் காலையில் போலீசால் கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபங்களில் சிறைவைக்கப்பட்டார்கள்.
தற்போது மோடி சென்ற பின்பும் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இதுகுறித்து பாரதிராஜா இப்போது பேட்டி அளித்துள்ளார். அதில் ஏன் இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை என்று தெரியவில்லை. இதற்கு பின் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் தனது பேட்டியில் "மோடி டெல்லி கிளம்பியதும் விடுதலை செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் மோடி டெல்லி கிளம்பிய பிறகும் விடுதலை செய்யவில்லை. யாருடைய கட்டளைக்காக காத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. போராட்டக்காரர்களை தனித்தனியாக பிரித்து அடைத்து வைத்துள்ளனர்.'' என்றுள்ளார்.
மேலும் " எல்லோரையும் வெவேறு இடங்களில் வைத்து இருக்கிறார்கள். ஒன்று விடுதலை செய்யுங்கள், இல்லை என்றால் கைது செய்து ரிமாண்ட் செய்யுங்கள். கைது செய்தால் எல்லோரையும் செய்யுங்கள், இல்லையென்றால் எல்லோரையும் விடுதலை செய்யுங்கள். ஆனால் எதையும் செய்யாமல் எங்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய முயற்சி செய்கிறார்கள்.'' என்றுள்ளார்.
முக்கியமாக "இது தமிழ் மண். இது தமிழ் உணர்வுக்கான போராட்டம். இப்படியே செய்து கொண்டு இருந்தால் பெரிய கிளர்ச்சி ஏற்படும். காவிரி பற்றி மோடி ஏதாவது பேசி இருந்தால் ரெட் கார்பெட், கோல்ட் கார்பெட் போட்டு இருப்போம். ஆனால் அவர் தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுகிறார். எந்த மக்கள் பிரச்சனையையும் கவனிக்காமல், எதையும் செய்யாமல் மோடி இருக்கிறார்.'' என்றுள்ளார்.
மேலும் ''விவசாயி பிரச்சனை பற்றியும் பேசவில்லை, நீட் பற்றியும் பேசவில்லை, எதை பற்றியும் எந்த முடிவும் கூறவில்லை. தமிழகம் முழுக்க தீ பற்றி எரியும் போது குளிர் காய வந்துள்ளார். பிரதமர் என்பவர் மக்களுக்கு பாதுகாப்பாளராக இருக்க வேண்டும். ஆனால் மோடி ஒரு கண்ணில் வெண்ணையும், ஒன்றில் சுண்ணாம்பும் வைத்துள்ளார். மக்கள் போராட்டம் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை'' என்றுள்ளார்.
இறுதியாக "தமிழகம் வந்து ராணுவம், பயிற்சி, கண்காட்சி இதையெல்லாம் பார்த்துவிட்டு சென்றுவிட்டார், நீங்கள் பாதுகாப்பாக சென்று விட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளீர்கள், ஆனால் அது உண்மை இல்லை. இங்கே நடக்கும் சின்ன விஷயம் கூட புரட்சியாக மாறும்.அது மோடிக்கு போக போக தெரியும் '' என்றுள்ளார்.