கூடங்குளம் முதல் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது: காணொலி மூலம் மோடி, ஜெ., புடின் பங்கேற்பு
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் முதல் அணு உலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்வில் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, இந்தியாவில் டெல்லி, சென்னை, கூடங்குளம் அணுமின் நிலையம் என நான்கு இடங்களில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
1000 மெகாவாட் உற்பத்தி திறனை கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்திலுள்ள அணு உலை,முழுக்க ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு உள்ள இரண்டு அணு உலைகளில் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
டெல்லியில் பிரதமர் மோடி உடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அணுமின்நிலைய விஞ்ஞானிகளுடன் தமிழக அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
கூடங்குளம் அணுமின்நிலையம்
ரஷ்ய ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணு உலை அமைக்க 1988 நவம்பர் 20 ம் தேதி, அப்போதைய பிரதமரான ராஜீவ்காந்தி, ரஷ்ய அதிபர் கோர்ப்பச்சேவ் ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையெழுத்து
இருநாடுகளிலும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளால் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1998 ஜூன் 21 ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், இந்த அணு உலையில் இருந்து 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
கிராம மக்கள் எதிர்ப்பு
12,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது 2008 ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இந்த அணு மின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கூடங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கடுமையான எதிர்ப்பால் இந்தத் திட்டத்துக்கான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
எதிர்ப்பு சமாளிப்பு
அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தொடர் உண்ணாவிரதம், போராட்டம் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறின. பின்னர், ஒருவழியாக போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
மின் உற்பத்தி தொடக்கம்
தற்போது 22,000 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் 2012 ல் முடிவடைந்தன. அதன் பின்னர் பல்வேறு ஆய்வுப் பணிகள் செய்யப்பட்டு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெற்று 2013, அக்டோபர் 22 ம் தேதி மின் உற்பத்தித் தொடங்கப்பட்டது. அன்றே இந்த மின்சாரமானது பவர் கிரீட்டில் இணைக்கப்பட்டது.
அணு உலை பழுது
இதனிடையே முதல் அணு உலையானது அடிக்கடி பழுதடையும் சம்பவங்களும் நடக்க தொடங்கின. வணிக நோக்கத்தில் மின்சார உற்பத்தி நடைபெற்ற பின்னர் நான்கு முறை இது போல மின் உற்பத்தியை நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு முறை பராமரிப்புக்காக 6 மாதங்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
1000 மெகா வாட் உற்பத்தி
தற்போது முதல் அணு உலையானது அதிகபட்ச உற்பத்தி அளவான 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பவர் கிரீட் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி எவ்வளவு
இதுவரையிலும் இந்த அணு உலையில் இருந்து 6,495 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டியில் மட்டும் முதலாவது அணு உலையில் இருந்து 2,150 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த அணு உலை முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் இதனை நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது.
யாருக்கு எவ்வளவு?
இந்த அணு உலை தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்துக்கு 563 மெகாவாட், கேராளாவுக்கு 133 மெகாவாட், கர்நாடகாவுக்கு 221 மெகாவாட், தெலுங்கானாவுக்கு 50 மெகாவாட், பாண்டிச்சேரிக்கு 33 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. 2வது அணு உலையும் செயல்பட தொடங்கியுள்ளது. அடுத்த கட்டமாக 3,4 வது அணு உலைகளுக்கான கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளது.