20 ஸ்மார்ட் சிட்டி பணிகளை தொடக்கி வைத்த மோடி... காணொலி காட்சி மூலம் பங்கேற்ற சென்னை மேயர்
சென்னை: நாடு முழுவதும் 20 நகரங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி புனேயில் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி முதல்கட்டமாக ரூ.1,770 கோடியில் 83 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் ‘ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றப்படுகின்றன. புனேவில் விழா நடந்த அதே நேரத்தில் காணொலி காட்சியாக பல நகரங்களில் இது நேரடியாக ஒளிப்பரப்பட்டது.
சென்னை ராஜாஜி பவனில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
100 ஸ்மார்ட் சிட்டி
கடந்த 2014ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.48 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக புனே, புவனேஸ்வரம், கொச்சி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை, கோவை உட்பட 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மோடி தொடக்கம்
இந்த நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான முதல்கட்டப் பணிகளை மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி புனேயில் 14 திட்டப் பணிகளும் இதர 19 நகரங்களில் 69 திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,770 கோடியாகும்.
சிறப்பு போட்டி
ஸ்மார்ட் சிட்டி தொடர்பான பொதுமக்களுக்கான சிறப்பு போட்டியையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்பட உள்ளது.
நகரமயமாதல் தடைக்கல் இல்லை
விழாவில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் மிகப்பெரிய திட்டங்களில் ஸ்மார்ட் சிட்டியும் ஒன்றாகும். மக்களின் தொழில்திறன் மேம்படும்போது இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
பெரிய நகரங்கள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களை எவ்வாறு தேர்வு செய்தீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்டனர். நாங்கள் எந்த நகரத்தையும் தேர்வு செய்யவில்லை. இந்தப் பெருமை எல்லாம் அந்தந்த நகரங்களின் மக்களையே சேரும். ஒவ்வொரு நகர மக்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டே நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நகரமயமாதல்
கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் மக்கள் குடியேறத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்பட்டது. என்னைப் பொறுத்தவரை இது பிரச்சினையோ, தடைக் கல்லோ இல்லை. நகரமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குப்பையில் இருந்து கோபுரம்
ஒவ்வொரு நகருக்கும் தனித்தன்மைகள் இருக் கின்றன. அதை திறம்பட பயன்படுத்த வேண்டும். வறுமைக்கு எதிராக அனைத்து நகரங்களும் தீரமாகப் போரிட வேண்டும். வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு உழைக்க வேண்டும். இதன்மூலம் நாம் குப்பையில் இருந்து கோபுரத்தை உருவாக்க முடியும் என்றார் மோடி.
வீடியோ கான்பரன்ஸ் இணைப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி தொடக்க விழாவின்போது இதர 19 நகரங்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. அப்போது சில நகரங்களின் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விழாவில் பேசினர்.
சென்னை - கோவை
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படுகின்றன. புனேவில் விழா நடந்த அதே நேரத்தில் காணொலி காட்சியாக பல நகரங்களில் இது நேரடியாக ஒளிப்பரப்பட்டது.
சென்னை மேயர்
சென்னை ராஜாஜி பவனில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். ஆணையாளர் டாக்டர் பி.சந்தரமோகன், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச்செயலாளர் பி.ஆனந்த் உள்ளிட்டோர் புனேவில் நடந்த நிகழ்ச்சியை கடைசி வரை அவர்கள் காணொலி காட்சியாக பார்வையிட்டனர்.