துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உடன் பிரதமர் மோடி சந்திப்பு
சென்னை: உடல்நலம் குன்றியுள்ள துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது வீட்டில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று சோ தெரிவித்துள்ளார்.
அத்வானியின் ஆதரவாளரும் நண்பருமான சோ.ராமசாமி கடந்த சில ஆண்டுகளாவே மோடி பிரதமராகவேண்டும் என்று பேசி வந்தார். கடந்த 2013, 2014ம் ஆண்டுகளில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய சோ, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எப்படி கூட்டணி அமைந்தாலும் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும். அவர் பிரதமராக முடியாத சூழல் உருவானால், ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு பேசினார்.
இந்தநிலையில் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை வந்துள்ள மோடி உடல் நலம் குன்றியுள்ள தனது நண்பரைக் காண அவரது வீட்டிற்குச் சென்றார். மோடியின் பயணத்திட்டத்தில் இது திடீர் நிகழ்வு என்பதால் ஊடகவியலாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.தன்னை காண வந்த நண்பரை உற்சாகத்துடன் சோ.ராமசாமி வரவேற்றதாக கூறப்படுகிறது. சோ வீட்டில் சில நிமிடங்களே இருந்த மோடி பின்னர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோ, நீண்ட கால நண்பர் சந்தித்து உடல் நலம் விசாரித்தது குறித்து சந்தோசத்தை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினேன். அரசியல் குறித்து ஏதாவது பேசினீர்களா? என்று கேட்கப்படுகிறது. இல்லை. நட்பு ரீதியான விஷயங்களை மட்டுமே பேசினோம். அவரிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. நீண்டகால நண்பரைச் சந்தித்ததால் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.
முன்னதாக கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த நிகழ்ச்சி முடிவடைந்த உடன் போயஸ்தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டில் மதிய உணவு அருந்தினார். இதுவும் நட்பு ரீதியான சந்திப்புதான் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்தை காண மோடி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.