மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு: மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?
சென்னை : பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு மக்களிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் செல்லாது என நேற்று அறிவித்தார்.
மாறாக வெள்ளிக் கிழமை முதல் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் தங்களின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும் கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதனை சரியாக புரிந்து கொள்ளாத பலர் நேற்றிரவே இ கார்னர் மையங்கள் மூலம் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர்.
மோடியின் அறிவிப்பு குறித்து பல தரப்பட்ட மக்கள் சொல்வது என்ன? அவர்கள் இந்த அறிவிப்பை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து ஒரு செய்தித் தொகுப்பு...
சில்லரை இல்லை பாதிக்கு பாதி பொருள் வாங்கிக்குங்க..
சென்னை வளசரவாக்கத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வரும் செந்தில் ராஜ் அண்ணாச்சிக்கு நேற்றிரவு வீட்டிற்கு சென்ற பிறகுதான் மோடி அறிவிப்பு தெரியுமாம். வழக்கமாக 10.30 மணிக்கு கடை மூடப்படும் ஆனால் மக்கள் பொருட்களை வாங்க குவிந்ததால் நேற்றிரவு ஒரு மணிக்கு பிறகே கடை மூடப்பட்டது. வியாபாரம் களைகட்டியதால் விசேஷம் என்று நினைத்த செந்தில் ராஜ்க்கு வீட்டிற்கு சென்ற பின்னரே விஷயம் தெரிய வந்துள்ளது. இன்று சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கு பாதி பொருள் வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் ரூபாயை கொடுத்து பொருள் வாங்குபவர்கள் குறைந்தது 500 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள செந்தில் ராஜ் ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு மீதி 500 ரூபாயை தருகிறார். தெளிவான மனுஷன் தான்...
இது அநியாயம்ங்க....
வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் ராணி தனக்கு சம்பளம் 500 ரூபாய் நோட்டுகளாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளர். இதனை வாங்க கடைக்காரர்கள் மறுப்பதாக தெரிவித்துள்ள அவர், மோடியின் இந்த அறிவிப்பு அநியாம் என்றும் குமுறியுள்ளார்.
நாளைக்கு காசு கொடுங்க இன்னைக்கு ஜூஸ் குடிங்க...
சென்னை வளசரவாக்கத்தில் ஜூஸ் கடை நடத்தி வரும் முகமது பாவா என்பவர் சில்லறை தட்டுப்பாட்டால் தெரிந்தவர்களிடம் நாளை பணம் பெற்றுக்கொள்வதாக கூறி வியாபாரம் செய்து வருகிறார். இருக்கும் சில்லறையை புதிதாக கடைக்கு வரும் நபர்களுக்கு கொடுத்து மேனேஜ் செய்து வருகிறார்.
பாலுக்கு நாளைக்கு காசு குடுங்க சில்லரை இல்லை
சென்னை வளசரவாக்கத்தில் சிறியளவில் மளிகைக்கடை நடத்தி வரும் சில்லரை வணிகரான தங்கத்துரை அண்ணாச்சியிடம் சில்லரை இல்லையாம். அதனால் இன்று பால் வாங்கியவர்களிடம் நாளை பணம் பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். மொத்த சில்லரையும் காலியாகி விட்டதால் கடைக்கு இன்று லீடு விடப்போகிறாராம்...
ஈ, எறும்பு இல்லாத ஏடிஎம்கள்..
மோடி அறிவிப்பு வந்த உடனேயே ஏடிஎம்களிலும் இகார்னர்களிலும் மொய்த்த மக்கள் இன்று எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் காவலாளிகள் மட்டும் ஈ ஓட்டிக்கொண்டிருந்தனர். சில ஏடிஎம்கள் மட்டுமே மூடப்பட்டிருந்தன.