ஈஷா யோக மையத்தில் சிவன் சிலை திறப்பு.. மோடி வருகைக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன் தெரியுமா?
ஏற்கனவே பல்வேறு விதிமீறல் புகார்களுக்கு உள்ளாகியுள்ள ஈஷா யோக மையம் நடத்தும், 112 அடி உயர சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கோவை மாவட்டத்தின் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 24ம் தேதி இங்கு அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்று, சிலையை திறந்து வைக்க உள்ளார். ஆனால், ஈஷா யோகா மையம், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் மோடி வருகைக்கு குடிமை மற்றும் சூழலியல் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
மகா சிவராத்திரி தினத்தையொட்டி நடக்கும் விழாவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சர்ச்சைகளால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல்
ஈஷா மையம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி பகுதியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 44 ஆயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை இடிப்பதற்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்போது 112 அடி உயரமுள்ள சிவன் சிலை நிர்மாணிக்கப்பட்டிருப்பது சரியாகாது என்பதுதான்.
கட்டிட பரப்பு அதிகரிப்பு
அங்கு, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளதாகவும், தமிழக அரசு சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதாகவும், தொடர்ந்து கட்டுமானப் பரப்பை அதிகரித்துக்கொண்டே போவதாகவும் உதிரி குற்றச்சாட்டுகளும் ஈஷாவுக்கு எதிராக முன் வைக்கப்படுகின்றன.
பூவுலகின் நண்பர்கள்
ஈஷா மையத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமைப்புகளில் முக்கியமானது, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஆகும். இதுவரை 5 வழக்குகளை ஈஷாவுக்கு எதிராக இந்த அமைப்பு பதிவு செய்துள்ளது. இதுதவிர, வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பும் ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தில் மனு
சிவன் சிலை திறக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, தாக்கல் செய்த வழக்கு இன்னமும், நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுவரும் ஈஷா யோகா மையத்தின் விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என பிரதமருக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அந்த ஆசிரத்திற்கு எதிராக பக்தர்களின் பெற்றோர் கிளப்பிய கட்டாய சன்னியாசம் குறித்த புகாரும் இப்போது விமர்சனத்திற்கு முன் வைக்கப்புடகிறது. இருப்பினும் பிரதமர் வருகையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கு ஈஷாதான் பதில் அளிக்க வேண்டும்.