தமிழகத்தில் 356… சுப்பிரமணியன் சுவாமி கருத்துக்கு மோடி விளக்கம் தர வேண்டும்... திருநாவுக்கரசர்
சென்னை: தமிழகத்தில் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறாரா என்பதை விளக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது:
ராகுல் காந்தி சென்னைக்கு வந்து அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்துவிட்டுச் சென்றதில் அரசியல் ஏதுவும் இல்லை. அது முழுக்க முழுக்க அரசியலற்ற தனிப் பயணம் ஆகும். சோனியாகாந்தியின் விருப்பத்தின்படி அவரது வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லவே ராகுல்காந்தி அப்போலோவிற்கு வந்தார்.
பொறுப்பு முதல்வர், துணை முதல்வர்கள் குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது அவரது சொந்தக் கருத்து. என்னைப் பொருத்தவரை, ஆட்சிக்கு தலைமை வகிக்கும் முதல்வர் உடல் நிலை தேறி வருகிறது; ஆளுநர், தலைமை செயலாளர், மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள்; முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பேணிக் காப்பதாக இருந்தாலும் தமிழக அரசின் பணியை பேணிக் காப்பதாக இருந்தாலும் அது அவர்களுடைய பணி.
அதற்கும் அப்பால், அதிமுக மக்களுடைய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. ஆக, தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய அவசியம் அதிமுகவினருக்கே உள்ளது. காங்கிரஸ் சார்பில் கருத்துச் சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் கவர்னர், அமைச்சர்கள், நிர்வாக தலைவர் ஆகியோருக்கு தமிழக அரசு முறையாக செயல்படுவதில் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் சரியாக செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் 356யை பயன்படுத்துவது குறித்து பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறாரா என்பதை விளக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.