படித்து முடித்ததும் வெளிநாடுகளுக்குப் பறக்கக் கூடாது மாணவர்கள் - மோடி 'அட்வைஸ்'
சென்னை: படித்து முடித்ததும் வெளிநாடுகளுக்குச் செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இங்கேயே தங்கியிருந்தால்தான் உள்நாட்டுத் தொழில்நுட்பம் வரும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை வந்திருந்த மோடி நேற்று வண்டலூர் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். இன்று காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பட்டங்களை வழங்கி அவர் பட்டமளிப்பு உரையும் நிகழ்த்தினார் மேலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பச்சைமுத்துவின் தாயார் வள்ளியம்மை சிலையை கல்லூரி வளாகத்தில் அவர் திறந்து வைத்தார்.
இன்றைய நிகழ்ச்சியில், டிஆர்டிஓ இயக்குநர் ஜெனரல் அவினாஷ் சந்தருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மோடி அதை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், உள்நாட்டுத் தொழில்நுட்பம் வளர வேண்டும் என்றால் படித்து முடித்ததும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் போகாமல் இங்கேயே பணியாற்ற முன்வர வேண்டும்.
ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களைத் தேடிப் போவதை விட்டு விட்டு அதுபோன்ற நிறுவனங்கள் இங்கு தொடங்கப்பட வேண்டும்.
நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் கல்வியில் நாம் இன்னும் வளர்ச்சி அடையாமலேயே உள்ளோம். அதேசமயம் கல்வித்துறையில் தனியார் நிறுவனங்கள் சிறப்பாகவே செயல்படுகின்றன என்றார் மோடி.