மோடிக்கும் சுஷ்மாவுக்கும் அப்படி என்ன தலை போகிற வேலை.. கொதிக்கும் மக்கள்
தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டத குறித்து பிரதமர் மோடியோ சுஷ்மா சுவராஜோ இதுவரை வாய்திறக்கவில்லை.
சென்னை: தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டத குறித்து பிரதமர் மோடியோ சுஷ்மா சுவராஜோ இதுவரை வாய்திறக்கவில்லை. நாட்டில் நடந்துள்ள ஒரு பிரச்சனைக்கு கூட வாய்திறக்காமல் அப்படி என்னதான் செய்கிறது மத்திய அரசு என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த 22 வயது மீனவர்கள் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள கடற்படையைக் கண்டித்து மீனவ கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மோடியும் சுஷ்மாவும் வாய்திறக்கவில்லை
ஆனால் பிரதமர் மோடியும் வெளியுறவுத்து அமைச்சருமான சுஷ்மா சுவராஜும் இதுவரை இப்பிரச்சனைக் குறித்து வாய்திறக்கவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் துடித்துப் போகும் பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவும் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு டிவிட் கூட இல்லை
இந்தியா குறித்த ஆன்லைன் ஷாப்பிங் விளம்பரங்களுக்கு வரிந்து கட்டி செல்லும் சுஷ்மா இதுவரை உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ஆறுதலாக ஒரு இரங்கல் டிவிட் கூட போடவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தூதரகங்களிடம் விளக்கம் கேட்கும் சுஷ்மா டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை இதுவரை அழைத்து என்ன நடந்தது என்று கூட கேட்கவில்லை.
மோடியும் கருத்து தெரிவிக்கவில்லை
இலங்கையுடன் நட்புறவை பாராட்டும் பிரதமர் மோடி இதுவரை துப்பாக்கிச்சூடு தொடர்பாக எதுவும் பேசவில்லை. தொட்டதுக்கெல்லாம் டிவிட்டரில் விளக்கம் தரும் அவர் தமிழக மீனவர் கொலை குறித்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு
ஒரு மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஒரு விவகாரத்தைவிட பிரதமர் மோடிக்கும் சுஷ்மாவுக்கும் இதைவிட என்ன முக்கியமான வேலை என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடந்துகொள்கிறது என்பது இதிலேயே தெரிகிறது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.