ஆர்கே நகரில் திசையெங்கும் ஜரூர் பணவிநியோகம்... ஷாக் பார்வையாளர்கள்- மீண்டும் தேர்தல் ரத்து?
ஆர்.கே.நகரில் தொடர்ந்து பணவிநியோகம் நடைபெறுவதால் இடைத் தேர்தல் மீண்டும் ரத்தாகும் நிலைமை உறுதியாகி வருகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்தேறும் அத்தனை முறைகேடுகளும் மீண்டும் தேர்தல் ரத்து நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆர்கே நகரில் முகாமிட்டுள்ள மத்திய பார்வையாளர்கள் தேர்தலை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக தீவிர ஆலோசனையில் இருக்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. அவருடன் சேர்ந்த ஆய்வு நடத்தும் விக்ரம் பத்ரா உள்ளிட்ட 9 மத்திய பார்வையாளர்களை நினைத்து கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன அரசியல் கட்சிகள்.
தொப்பி சின்னத்தில் தினகரன் போட்டியிட்டபோது, முதலமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறங்கி தேர்தல் வேலை பார்த்தனர். அந்தத் தேர்தலில் சி.பி.எம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் லோகநாதன். தொகுதிக்குள் பண விநியோகம் வரலாறு காணாத அளவுக்கு இருந்ததால், தேர்தல் கமிஷனை அணுகினார் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். ராஜேஷ் லக்கானியை சந்தித்துவிட்டு வெளியே வந்தவர், தேர்தல் பார்வையாளராக விக்ரம் பத்ரா வந்ததில் இருந்தே மிகுந்த சோர்வாக இருக்கிறார் லக்கானி. அநேகமாக தேர்தல் ரத்து குறித்து ஆலோசிக்கிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது என சக தோழர்களிடம் பேசிவிட்டுச் சென்றார்.
தினகரன் கோஷ்டி திகில்
அதே விக்ரம் பத்ரா மீண்டும் ஆர்.கே.நகர் களத்தில் இறக்கிவிடப்பட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் தினகரன் கோஷ்டியினர். ஆர்.கே.நகர் விவகாரத்தைக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். அ.தி.மு.க அம்மா அணி சார்பாக கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ 100 கோடி வரையில் விநியோகம் நடத்தப்பட்டது.
மீண்டும் பத்ரா களத்தில்
இதுகுறித்து டெல்லிக்குத் தகவல்கள் பறந்தன. தேர்தல் செலவு கணக்குகளில் மிகவும் உன்னிப்பானவரான விக்ரம் பத்ராவை அனுப்பி வைத்தது தேர்தல் ஆணையம். சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும் தேர்தல் ஆணையத்தின் செலவினப்பிரிவு இயக்குநராக உள்ள விக்ரம் பத்ரா களமிறக்கப்பட்டதை தினகரன் ஆட்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் நுண்ணிய பார்வையாளர்கள் 70 பேர் ஆர்.கே.நகருக்கு வரவழைக்கப்பட்டனர். வாகனங்கள் செல்ல முடியாத தெருக்களில் இருசக்கர வாகனத்தில் சென்று முறைகேடுகளை கண்காணித்தனர். மத்திய அரசுப் பணியாளர்களான இவர்களுடன் ஒரு போலீஸ்காரரும் உடன் சென்றார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தால் உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள். இந்த நடவடிக்கைக்குப் பிறகுதான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அடித்தளம் போட்ட பத்ரா
அதேபோன்ற ஒரு சூழ்நிலை ஆர்.கே.நகரில் நிலவுவதாக சந்தேகப்படுகின்றனர் ஆணைய அதிகாரிகள். இந்தமுறை 256 வாக்குச்சாவடிகளுக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் களத்தில் விக்ரம் பத்ரா இருந்த நாட்களில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் ஆளும்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் சிக்கினர். இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கைகளுக்கு ஆளாகக் கூடாது என்பதால்தான் தினகரனைவிட்டு அவர்கள் வெளியேறத் தொடங்கினர்.
டெல்லியில் ப்ளான்
விஜயபாஸ்கர் விவகாரம், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. 'தேர்தலில் தினகரன் வெற்றி பெறக் கூடிய சூழல் வந்துவிடக் கூடாது' என்பதுதான் டெல்லியின் முடிவாக இருந்தது. அதற்கேற்ப தேர்தலையும் ரத்து செய்தனர். இப்போது அதே பாணியில் விநியோகத்தைத் தொடங்கியிருக்கிறார் தினகரன் ஆர்கே நகர் க்ளைமாக்ஸ் என்ன என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.