ஏற்காட்டில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா: திமுக எம்.பி. உள்பட 6 பேர் மீது வழக்கு
சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு தலா ரூ. 500 வீதம் இரண்டு நபர்கள் வீடு வீடாக சென்று பணம் கொடுத்து வருவதாக அங்குள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அதிமுகவை சேர்ந்த மெடிக்கல் ராஜா, அய்யம்பெருமாள், இளங்கோவன் ஆகியோர் அங்கு சென்றனர். கூடவே, காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசாரையும் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த திமுக நிர்வாகி சேகர் (52) என்பவரையும், ஆத்தூர் புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரையும் கையும் களவுமாக பிடித்து, போலீசார் வசம் ஒப்பைடத்தனர்.
இதனையடுத்து மெடிக்கல் ராஜா கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சேகரிடம் இருந்து ரூ. 21 ஆயிரத்து 500-ம், ராஜேஷிடமிருந்து ரூ.77 ஆயிரத்து 675ம் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் முதல் எதிரியாக திமுக எம்.பி.யான டி.எம். செல்வகணபதி மற்றும் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட 6 பேர் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.