பணப் பிரச்னைக்கு பதில் சொல்ல பிரதமர் மோடி தயங்குவதாக ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
நாட்டில் நிலவும் பணப் பிரச்னைக்கு பதில் சொல்ல பிரதமர் மோடி தயங்குவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நிலவும் பணப் பிரச்னைக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டியது அவரது ஜனநாயகக் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,''இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்குவதற்கு நாட்டை ஆளுகின்ற மத்திய அரசு அனைத்து நல்ல முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில் நாட்டில்
அமைதியை நிலைநாட்டி, எல்லையோரப் பாதுகாப்பை தீவிரப்படுத்தி, நாட்டு மக்களைப் பாதுகாப்பதோடு, வறுமையைப் போக்கி நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் திட்டங்களை வகுத்து
செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
ஆனால், நம் நாட்டில் பாகிஸ்தானின் அத்துமீறலால் தீவிரவாதமும், பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதியில் வாழும் மக்கள் பதற்றத்தோடும், அச்சத்தோடும் வாழும் நிலையே தற்போது உள்ளது. கடந்த 22-ம் தேதி அன்று பாகிஸ்தான் படையினர் நம் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 3 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நம் நாட்டில் விவசாயத் தொழிலில் பெரும் பாதிப்பு, விலைவாசி ஏற்றம், வேலை வாய்ப்பின்மை, தொழில் துறையில் சுணக்கம் போன்றவற்றால் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இவற்றையெல்லாம் மத்திய பாஜக அரசு கவனத்தில் கொண்டு, அதற்கு நல்ல தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடாமல் பொது மக்களை திசை திருப்புவதற்காக தற்போது கறுப்புப் பணம் மீட்பு, கள்ள நோட்டு ஒழிப்பு ஆகியவற்றிற்காக முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்காமல் திடீரென்று ஒரு திட்டத்தை
அறிவித்தார்கள். இத்திட்டத்தினால் பொது மக்கள் குறிப்பாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பெறுவதற்கும், பழைய பணத்தை மாற்றுவதற்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சரியாக திட்டமிடாத காரணத்தினால்
பல இடங்களில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த பொது மக்களில் 65 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதியின் படி வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காதது ஏன். அதே போல உள்நாட்டில் உள்ள பெரும் தொழில் அதிபர்கள் வங்கியில் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் வராக் கடனை வசூல் செய்ய முன்வராதது ஏன்?
வானொலி மற்றும் வாட்ஸ் அப் மூலமாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து எதிர் கட்சி உறுப்பினர்கள், அரசியல் பாகுபாடின்றி எழுப்பும் இந்த பணப்பிரச்சினை தொடர்பான நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல தயங்குவது ஏன்?
மத்திய அரசு அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது ஏற்கெனவே பாஜகவினருக்கும், பெரும் தொழில் அதிபர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொண்டு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய
அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும் பிரதமர் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பணப்பிரச்சினைக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டியது ஜனநாயகக் கடமையாகும். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தமாகா தொடர்ந்து போராடும்'' என்று வாசன் கூறியுள்ளார்.