போலி ஏடிஎம் கார்டு மூலம் ரூ.4.31 லட்சம் கொள்ளை.. கோவை ஆணையரிடம் பெண் பரபரப்பு புகார்
போலி ஏடிஎம் கார்டு மூலம் கொள்ளையடித்த பணத்தை மீட்டுத்தர கோரி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
கோவை: போலி ஏ.டி.எம்., கார்டு மூலமாக வங்கி கணக்கிலிருந்து ரூ. 4.31 லட்சம் திருடப்பட்டுள்ளதாகவும், பணத்தை மீட்டுத்தரக்கோரியும் வங்கி ஊழியர் மீது கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சையது. கோவை மாநகராட்சியில் சுகாதார துறையில் பணியாற்றி உயிரிழந்த இவருடைய ஓய்வூதிய தொகையை கடந்த 38 வருடமாக அவரது மனைவி உசேன் பீவி பெற்று வந்துள்ளார். வி.எச்.சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கும், ஓய்வூதியத்தொகை வரவு கணக்கும் வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 17 ஆம் தேதி வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது, தனது வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்து விட்டதாக வங்கி ஊழியர்கள் கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த உசேன் பீவி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியதாவது:
வங்கி சேமிப்பு கணக்கில் ரூ. 4 லட்சத்து 31 ஆயிரத்து 300 வைத்திருந்தேன். அத்துடன், ஓய்வூதியத்தொகையும் இந்த வங்கி கணக்கில்தான் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஏ.டி.எம். கார்டு வாங்காத நிலையில், ரூ. 4 லட்சத்து 31ஆயிரத்து 300 பணத்தை போலி ஏ.டி.எம்.கார்டு மூலம் பணம் திருடப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் வங்கி சேமிப்பு பணத்தை திருட முடியாது என்பதால் இந்தியன் வங்கி மேலாளர் மீது சந்தேகம் உள்ளது. அதனால் பணத்தை திரும்ப கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் லைப் சான்றிதழ் பெறுவதற்காக வங்கி புத்தகத்தை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தகவல் மையம் அருகே விண்ணப்பம் பூர்த்தி செய்யும் நபரிடம் கொடுத்தேன். அதனால் அவரிடம் இரண்டு நாட்கள் வங்கி புத்தகம் இருந்தது.
இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.