கறிசோறு, ஸ்மார்ட் போன்.. பணம் இருந்தால் சசிகலா மட்டுமில்ல யாரு வேணாலும் சொகுசா இருக்கலாம் போலயே!
Recommended Video
சென்னை: கறிசோறு ஸ்மார்ட் போன் என புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. எனினும் இது புழல் சிறையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் இதன் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
சிறை என்றால் சுத்தப்பத்தம் இல்லாத அறைகள், பூச்சி விழுந்த சோறு, நாற்றம் வீசும் சூழல் என நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு பரப்பன அக்ரஹார சிறை முறைகேடு தெரியவந்தபோது ஓ சிறைச் சாலையில் இப்படியும் இருக்குமா என்று எண்ண வைத்தது.
இது வெளி மாநிலம் என்றாலும் தற்போது தமிழகத்தின் புழல் சிறையிலும் இதுபோன்று கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பாகிஸ்தானியர்
கடந்த 10 நாட்களுக்கு சிறையில் வார்டன் ஒருவர் தனது உள்ளாடையில் கைதிகளுக்கு விற்பதற்காக கஞ்சா வைத்திருந்தார். அதை அவர் அங்கு அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவானி என்று தேசிய புலனாய்வு அமைப்பால் சந்தேகத்துக்குள்ளான நபருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தார்.
சொகுசு வாழ்க்கை
இதையடுத்து அந்த வார்டன் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு போனில் இருந்த போட்டோக்கள் கைதிகள் எத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதையே காட்டுகிறது.
முதல் முறை
கைதிகள் தங்களுக்கு பிடித்தமான உணவு, உடை, அழகு சாதன பொருட்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிர்ச்சி கலந்து உண்மைகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள சிறைகளில் முறைகேடுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிடுவது இதுவே முதல் முறை.
செல்போன் முதல் சகலமும்
உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறையின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகின்றனர் என்று மற்ற சிறை கைதிகள் தெரிவிக்கின்றனர். இதுபோல் செல்வாக்குடன் வலம் வரும் கைதிகள் செல்போன் முதல் சன் கிளாஸ் வரையும் ஷூக்கள் முதல் ருசியான உணவு வரையும் பெறுகின்றனர்.
சம்பவங்கள்
இதுமட்டுமல்லாமல் காய்கறிகள், அரிசி ஆகியவற்றை வாங்கி தாங்களாகவே சமைத்தும் உண்கின்றனர். இவர்கள் உண்ணுவதோடு வீட்டு சமையலை விரும்பும் மற்ற கைதிகளுக்கும் விற்பனை செய்கின்றனராம். இந்த உணவில் விஷம் கொடுத்து மற்ற கைதிகளை கொலை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றனவாம்.
வேலை செய்யாத ஜாம்மர் கருவி
சிறையில் செல்போனை தடை செய்ய ஜாம்மர் கருவிகள் வைக்கப்பட்டாலும் அவை பெரும்பாலானவை செயலிழந்தவையாகவே உள்ளன. மேலும் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாம்மர் கருவிகள் இன்னும் சிறையில் வடிவமைக்கப்படவில்லை. தற்போது வெளியான புகைப்படங்களை பார்க்கும் போது பணம் இருந்தால் சிறை கைதிகளும் சொகுசு வாழ்க்கை வாழலாம் என அப்பட்டமாக தெரிகிறது.
மறுப்பு
இந்த புகைப்படங்கள் குறித்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லாவை தொடர்பு கொண்டு கேட்டபோது இவையெல்லாம் ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட படங்கள். இந்த புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார். எனினும் இந்த படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.