சால்னாவுக்குப் பதில் "காந்தி'.. கரூரில் பட்டையைக் கிளப்பும் பரோட்டா மேட்டர்!!
சென்னை: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு, கட்சிகளின் நடவடிக்கைகளை அது கவனித்து வருகிறது. வாகனச் சோதனை, அதிரடி ரெய்டு என தேர்தல் அதிகாரிகள் அதிரடியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என புதுப்புது வகைகளில் ரூம் போட்டு யோசித்து வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகிறார்களாம் கட்சித் தொண்டர்கள்.
பரோட்டா...
செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விடுகிறார்கள் என தேர்தல் ஆணையத்திற்கு புகார் போனதால், தற்போது அந்த வழி அடைக்கப்பட்டு விட்டது. இதனால், கரூர் பகுதியில் மதிய வேளைகளில் மக்களுக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்து கரெக்ட் செய்கிறார்களாம் கில்லாடி தொண்டர்கள்.
சால்னாவுக்கு பதில்...
அடிக்கிற வெயிலுக்கு மதியானத்துல பரோட்டோ சாப்பிட மக்களுக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது என குழம்பாதீர்கள், ஒவ்வொரு பொட்டலத்திலும் இரண்டு பரோட்டாக்களுக்கு இடையே சால்னாவுக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் நோட்டு காரசாரமாக சிரிக்கிறதாம்.
அல்வா...
இதனால், அப்பகுதியில் பரோட்டோ மாஸ்டர்களுக்கு வேலை அதிகமாகியுள்ளதாம். அல்வா கொடுத்தால் மக்கள் உஷாராகி விடுவார்கள் என்பதால், கட்சிக்காரர்கள் பரோட்டாவைக் கையில் எடுத்து விட்டார்கள் போலும்.
பெரிய சைஸ் டிபன் பாக்ஸ்...
இப்படித்தான் சமீபத்தில் மேற்கு மண்டல மாவட்டம் ஒன்றில் நிலவரத்தை ஆராயச் சென்ற உளவு போலீஸ் பிரிவு அதிகாரி ஒருவர், மதிய வேளையில் சுய உதவி குழுக்கள் தொடர்புடைய ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அம்மணிக்கு பெரிய சைஸ் டிபன் பாக்ஸ் ஒன்று வந்துள்ளது.
கரன்சி வாசம்...
ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்துள்ளது என அம்மணி மென்று விழுங்கி பேசியபோதும், அந்த டிபன்பாக்சில் இருந்து மருந்துக்கும் சாப்பாடு வாசனை வரவில்லையாம். முழுக்க முழுக்க கரன்சி வாசம் தான் அடித்ததாம்.
சாப்பாட்டுடன்...
இதேபோல், சில இடங்களில் இட்லிப் பொட்டலத்தில், ஸ்வீட் பார்சலில், கேக் பார்சலில் என பெரும்பாலும் உணவுப் பொருட்களோடு தான் தற்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறதாம்.
இப்படியாக விதவிதமான நூதன வழிகளில் தேர்தல் ஆணையத்தின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு கட்சிகள் ஜோராக பணப்பட்டுவாடா நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.